மதுரையில் 19,500 வீடுகளுடன் துணை நகரம்- முதல் கட்டமாக ரூ. 120 கோடி ஒதுக்கீடு

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை...
மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உறைவிடத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், குறிப்பாக, நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் வீட்டுவசதித் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
நவீனத் தொழில்நுட்பம்
அந்த வகையில், வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தும் திட்டங்களில் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக முன் கட்டுமான தொழில்நுட்பத்தை அதாவது Prefab Technology என்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, கட்டட பாகங்களான தூண், உத்திரம், மாடிப்படி, கூரை ஆகியவைகள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு, உபயோகத்திற்கு கொண்டு செல்வதற்கு முன் தண்ணீர் மூலம் உறுதி செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்படும்.
கட்டுமான பாகங்கள்தயாரிக்கப்பட்ட பின் அவைகள் கட்டுமான இடத்திற்கு கொண்டு வரப்பட்டு அதற்குரிய இடங்களில் இயந்திரங்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டு, கலக்கப்பட்ட திண்காரை கலவை மூலம் இணைக்கப்படும்.
24 மாடிகள் கொண்ட உயர் அடுக்குமாடிக் கட்டடங்களை இத்தொழில்நுட்பத்தின் மூலம் 24 மாதங்களில் கட்டி முடிக்க இயலும்.
சோழிநங்கநல்லூரில் 1500 வீடுகள்
முன் கட்டுமான தொழில்நுட்பம் என்ற இந்த நவீன தொழில்நுட்பம் முதற்கட்டமாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சோழிங்கநல்லூரில் கட்டப்பட உள்ள 1,500 பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தில் பயன்படுத்தவும், இத்திட்டத்தினை செயல்படுத்த 379 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் துணை நகரம்
சென்னை நகரத்தில் வசிக்கும் மக்களின் வீட்டு வசதி தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் வீட்டு வசதி தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வீட்டு வசதித் திட்டங்கள் ஜெயலலிதா தலைமையிலான அரசால் மாநிலத்திலுள்ள பல் வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் தற்பொழுது பெருகி வரும் வீட்டு வசதித் தேவையினைக் கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில், மதுரை விமான நிலையத்திற்கு அருகில் மதுரை திருநெல்வேலி நான்கு வழிப்பாதையில் தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒரு ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரத்தை உருவாக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த துணைக்கோள் நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்பட்டு, அவற்றில் 14,300 மனைகள் குறைந்த வருவாய் பிரிவினருக்கும், 2,500 மனைகள் மத்திய வருவாய் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய் பிரிவினருக்கும், 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த துணைக்கோள் நகரத்தில் குடியேறும் மக்களின் நலனுக்காக பள்ளி வளாகம் வணிக மனைகள், காவல் நிலையம், அஞ்சலகம், ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என அனைத்து வசதிகளும் உருவாக்கப்படும்.
ரூ. 120 கோடி நிதி ஒதுக்கீடு
முதற்கட்டமாக, இந்த துணைக்கோள் நகரத்தில் அடிப்படை வசதிகளான சாலைகள், குடிநீர் வசதி, கழிவுநீர், வடிகால் வசதி, மழைநீர் கால்வாய், சி றுபாலங்கள் மற்றும் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளுக்காக 120 கோடி ருபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு 19 ஹாஸ்டல்கள்
ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அச்சமூகத்தில் பெண்கள் அடைந்திருக்கின்ற வளர்ச்சியை வைத்தே அளவிடமுடியும். பெண்கள் வளர்ச்சி அடையும் போது சமூகம் வளர்வது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையினரும் வாழ்க்கையில் ஒரு சிறந்த துவக்கத்தை பெறுகின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அரசு பெண் கல்விக்கு அளித்து வரும் ஊக்கத்தின் காரணமாக, பெண்களில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. கல்வி பயின்ற பெண்கள் தாங்கள் கற்ற கல்விக்கு ஏற்ற பணிகளை தேடி, தாங்கள் வசிக்கும் ஊரிலிருந்து, மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு சென்று பணி புரிவது அதிகரித்து வருகிறது.
சென்னையில் 2 - 6 மாவட்டங்களில் 6
வெளியூரில் பணிகளுக்குச் செல்லும் மகளிருக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான உறைவிடங்கள் தேவைப்படுகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பான உறைவிட வசதிகளை செய்து தரும் வகையில் சமூகநலத் துறையின் மூலம், சென்னையில் 2, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தர்மபுரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களிலும் தலா ஒரு விடுதி என 8 பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னையில் மேலும் 6 ஹாஸ்டல்கள்
பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகளை மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி திருவள்ளூர், தஞ்சாவூர், திருப்பூர், பெரம்பலூர், விழுப்புரம், வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தலா 1 பணிபுரியும் மகளிர் விடுதியும், சென்னையில் 6 பணிபுரியும் மகளிர் விடுதிகளும், காஞ்சிபுரத்தில் 3 பணிபுரியும் மகளிர் விடுதிகளும் என பணிபுரியும் பெண்களுக்கான 19 அரசு விடுதிகள் சுமார் 1,000 பணிபுரியும் பெண்கள் பயன்பெறும் வகையில் துவங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடுதிகளில் பணியாற்ற ஒவ்வொரு விடுதிக்கும் கண்காணிப்பாளர் 1, சமையலர் 2, உதவி சமையலர் (தொகுப்பு ஊதியம்) 1, உதவி சமையலர் (தினக்கூலி) 1, அலுவலக உதவியாளர் 1, இரவு காவலர் 1, துப்புரவாளர் (தினக்கூலி) 1 என 8 பணியிடங்களை தோற்றுவிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு விடுதிக்கு ரூ. 21.60 லட்சம்
இந்த விடுதிகளுக்காக தொடர் மற்றும் தொடரா செலவினமாக ஒரு விடுதிக்கு 21 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வீதம், 19 விடுதிகளுக்கு 4 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய், விடுதிகளுக்கு கட்டடம் கட்டுவதற்காக விடுதி ஒன்றுக்கு 1 கோடியே 1 லட்சம் வீதம், 19 விடுதிகளுக்கு 19 கோடியே 19 லட்சம் ரூபாய், விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டும் வரை வாடகை செலவு ஒவ்வொரு விடுதிக்கும் ஒரு ஆண்டுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் வீதம், 19 விடுதிகளுக்கு 45 லட்சத்து 60 ஆயிரம் ருபாய் என 23 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்துள்ளார்.
பெண்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் பணி நிமித்தமாக வெளியிடம் செல்லும் பெண்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கு வழிவகை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications