ஜெயலலிதா என்னும் நான்.. 5 வருடத்தில் 3வது முறையாக முதல்வராகப் பதவியேற்கும் ஜெ.!
சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் 3வது முறையாக முதல்வராகப் பதவியேற்று புதிய சாதனை படைக்கிறார் ஜெயலலிதா.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. நாளை முதல்வராக ஜெயலலிதாவும், 28 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பது இது 3வது முறையாகும். அந்த வகையில் இது ஒரு சாதனையாகும். இதற்கு முன்பு இவ்வளவு குறுகிய காலத்தில் யாரும் முதல்வர் பதவியை 3 முறை வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2011ம் ஆண்டு மே 16ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா. இது அவரது 4வது முதல்வர் பதவியேற்பாகும்.
2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது முதல்வர் பதவியும், எம்.எல்.ஏ. பதவியும் காலியானது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
2015ம் ஆண்டு மே 11ம் தேதி அவர் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையானார். இதையடுத்து அவருக்கு ஆர்.கே.நகர் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல். இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார்.
2015ம் ஆண்டு மே 23ம் தேதி தமிழக முதல்வராக 5வது முறையாக பதவியேற்றார் ஜெயலலிதா.
தற்போது 2016ம் ஆண்டு மே 16ம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா. எனவே கடந்த 5 ஆண்டுகளில் 3வது முறையாக அவர் முதல்வராகப் பதவியேற்கிறார்.

மேலும் கடந்த 3 முறையும் அவர் முதல்வராகப் பதவியேற்றது மே மாதத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதை விட முக்கியமாக கடந்த 2015 இடைத் தேர்தலுக்குப் பின்னர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்றது இதே மே 23ம் தேதிதான் என்பது கவனிப்புக்குரியது.
மே மாதம் இனி "மேடம்" மாதம் என்று கூட அதிமுகவினரால் அழைக்கப்படலாம்!












Click it and Unblock the Notifications