ஜெயலலிதா முன் "கடுகு" சைஸில் டிராபிக் ராமசாமி.. சொத்து விஷயத்தில் மட்டுமல்ல, கேஸ் லிஸ்ட்டிலும்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியலை தூக்கி டேபிளில் வைத்தால், டிராபிக் ராமசமியின் சொத்துப் பட்டியலுக்கு, பஸ் டிக்கெட்டின் பாதியைக் கிழித்து, அதிலும் பாதியைக் கழித்து, மிச்சம் வரும் பேப்பரின் ஒரு ஓரத்தில் எழுதி விடலாம்.
அதேபோலத்தான் ஜெயலலிதா மீதுள்ள வழக்குகள் விவரமும். பெரிய டிபன் கேரியர் போல பல அடுக்குகளைக் கொண்டு பெரிய லிஸ்ட்டாக உள்ளது ஜெயலலிதா மீதான வழக்குகளின் விவரம். டிராபிக் ராமசாமி மீது வெறும் 4 வழக்குகளே நிலுவையில் உள்ளது.
இவை இரண்டு பேரும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் கூறியுள்ள தகவல்கள்.
டிராபிக் ராமசாமி மீது நிலுவையில் உள்ள வழக்குகள் விவரம்:
- எப்3, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் (சிஆர் நம்பர் 763 -2013)
- வேப்பேரி காவல் நிலையம் (சிஆர் நம்பர் 462-2013)
- சட்டக் கல்லூரி காவல் நிலையம் (சி.ஆர். நம்பர் 37-2014)
- கரூர் டவுன் காவல் நிலையம் (சிஆர் நம்பர் 62-2015
தான் எந்த வழக்கிலும் தண்டிக்கப்பட்டதில்லை, தண்டனை பெற்றதில்லை என்ற விவரத்தையும் டிராபிக் ராமசாமி வேட்பு மனுவோடு தாக்கல் செய்த அபிடவிட்டில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீது உள்ள வழக்குகள் விவரம், தண்டனை பெற்ற விவரம்:
- 1997ல் போடப்பட்ட செல்வ வரிச் சட்டத்தின் கீழான பொருளாதார அமலாக்ப் பிரிவு வழக்கு. 2011ல் இந்த வழக்கிலிருந்து விடுவிப்பு.
- 2006ம் ஆண்டு சென்னை சிபிஐ கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு. 2011ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வழக்கிலிருந்து விடுவிப்பு.
- 2009ம் ஆண்டு சென்னை எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போடப்பட்ட வழக்கு. நிலுவையில் உள்ளது.
- 2010ம் ஆண்டு சென்னை எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போடப்பட்ட வழக்கு. நிலுவையில் உள்ளது.
- 2007ம் ஆண்டு தொடரப்பட்ட புவனகிரி சட்டசபைத் தொகுதி தேர்தல் அதிகாரி புகார் கொடுக்க தாமதம் செய்தது தொடர்பான வழக்கு. 2013ம் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
- 2007ம் ஆண்டு தொடரப்பட்ட புதுக்கோட்டை தேர்தல் அதிகாரி புகார் அளிக்க தாமதம் செய்தது தொடர்பான வழக்கு. நிலுவையில் உள்ளது.
- சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு 36வது கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் கோர்ட்டால் 4 ஆண்டு தண்டனை மற்றும் ரூ 100 கோடி அபராதம். இருப்பினும் இந்த தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீடு ஏற்கப்பட்டு விடுதலை.
இவை ஜெயலலிதா தனது அபிடவிட்டில் தெரிவித்துள்ள வழக்குகள், தண்டனைகள் குறித்த விவரம்.
சி.மகேந்திரன் தன் மீது எந்த வழக்கும் இல்லை, எதிலும் தண்டிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.