தேர்தல் அதிகாரி சக்சேனா உதவியுடன் ஜெ. அமோக வெற்றி பெறுவார்: ஈ.வி.கே.எஸ்.
மதுரை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவின் உதவியுடன் முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவார் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் துவக்கத்தில் இருந்து அதிமுக வேட்பாளரான முதல்வர் ஜெயலலிதா முன்னிலை வகித்து வருகிறார்.

இந்நிலையில் இடைத்தேர்தல் பற்றி தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
டெல்லியை விட சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக உள்ளது. டெல்லியில் 11 கிலோமீட்டருக்கு ரூ.19 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அதே தூரத்திற்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தை குறைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அதிமுக செயலாளர் போன்று செயல்பட்டு வந்தார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பல ஊழல்கள் நடந்துள்ளது. இது ஒன்றும் முறையாக நடந்த தேர்தல் இல்லை.
இடைத்தேர்தலில் சந்தீப் சக்சேனா உதவியுடன் ஜெயலலிதா அமோக வெற்றி பெறுவார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. பெண்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பெண்களுக்கு அதிக அளவில் பாலியல் தொல்லை அளிக்கப்படுகிறது. மாநிலத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications