நியாயத்தின் சமாதி நீதிகளின் புதைகுழி ஆகிவிட்டது...: நாஞ்சில் சம்பத் வேதனை
நாகர்கோவில்: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி வெற்றி நிச்சயம் எங்களை வந்து சேரும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் அதிமுக கொள்கை பரப்புத் துணை செயலாளர் நாஞ்சில் சம்பத்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி அதிமுகவினரும், மற்ற துறையினரும் பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
பொய் வழக்கு...
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி 10 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தார் என்ற பொய்யான வழக்கை தொடர்ந்து அதற்கு கர்நாடகா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் நியாயத்தின் சமாதி நீதிகளின் புதைகுழி ஆகிவிட்டது.
திட்டமிட்ட சதி...
27-ந் தேதி தசரா விடுமுறை என்று தெரிந்திருந்தும் அன்று அவருக்கு தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது. கோர்ட்டில் தனக்கு மூட்டுவலி, சர்க்கரை நோய் இருப்பதாக கூறியும் அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை கோர்ட்டு நிராகரித்து விட்டது. இதன் மூலம் திட்டமிட்டே தமிழகம் பழிவாங்கப்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவின் சாதனை...
காவிரி மேலாண்மை ஆணைய குழு அமைக்க சுப்ரீம் கோர்ட்டு மூலம் உத்தரவு பிறப்பிக்க வைத்தவர் ஜெயலலிதா. இது தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த சாதனையை படைத்தவர் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா.
திமுகக் கூட்டம்...
இதற்கிடையே வருகிற 8-ந் தேதி தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றி விவாதிக்க இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
அமைதிப் பூங்கா...
தமிழகத்தில் அப்படி என்ன அசாதாரண நிலை நிலவுகிறது. அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் எங்கு சட்டம்-ஒழுங்கு கெட்டு போய் உள்ளது.
நீதி தேவதை...
அ.தி.மு.க.வின் பொது செயலாளர் ஜெயலலிதாவை விடுவிக்க கோரி தமிழகத்தின் ஆறரை கோடி தமிழ் மக்களும் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். நாங்கள் நியாயத்தின் கதவை தொடர்ந்து தட்டுவோம். நீதி தேவதை நிச்சயம் காட்சி தருவார். இறுதி வெற்றி எங்களுக்கே வந்து சேரும்.
அரியணை ஏறுவார்...
எங்கள் பொது செயலாளர் வழிகாட்டுதலில் மீண்டும் எங்கள் பணி தொடரும். இதற்காக அவர் விரைவில் அரியணை ஏறுவார். அது நிச்சயம் நடக்கும்.
இதுவரை நடக்காதது...
எங்கள் பொது செயலாளர் கைதானதை கண்டித்து இதுவரை 67 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். இது எந்த தலைவருக்கும் இதுவரை நடக்காத செயல். இப்படி யாருக்காகவும் உயிர் தியாகம் செய்ததில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.