ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து பின் மனிதனைக் கடித்தது.. ஓபிஎஸ் அணியை பிரித்து மேய்ந்த ஜெயக்குமார்
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து பின் மனிதனைக் கடித்தது போல ஓபிஎஸ் அணியினர் ஆட்சியை கவிழ்க்கப் பார்ப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து பின் மனிதனைக் கடித்தது போல ஓபிஎஸ் அணியினர் ஆட்சியை கவிழ்க்கப் பார்ப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உட்பட அனைவரும் சந்தர்ப்பவாதிகளே என்றும் ஜெயக்குமார் சாடினார்.
தமிழறிஞர் கால்டுவெல்லின் 203-ஆவது பிறந்ததினத்தையொட்டி, சென்னை அண்ணா சதுக்கத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது 2021 வரை அதிமுக-வின் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறும், ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரின் அணியில் உள்ளவர்கள் பொறுப்பில் நீடிக்க மாட்டார்கள் என்ற மைத்ரேயனின் கருத்துக்கு அவர் பதிலளித்தார்.

மைத்ரேயன் கருத்து வேடிக்கையானது
அவர் கூறியதாவது, கட்சிக்காக அடி, உதைகள் பட்டு சிறைகள் சென்று தியாகம் செய்த உண்மைத் தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் மைத்ரேயனின் கருத்து வேடிக்கையானது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அனைவரும் சந்தர்ப்பவாதிகளே
மேலும், கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அனைத்து நிர்வாகிகளும், ஓபிஎஸ் உட்பட அனைவரும் சந்தர்ப்பவாதிகளே என்றும் அவர் கூறினார். ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர வேண்டும் என்று நினைப்பவர்களே அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என்றும் அவர் கூறினார்.

ஆட்சியை கவிழ்க்க நினைகிறார்கள்
கட்சியில் இருந்து பிரிந்து சென்றுள்ள ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைத்து வீட்டிற்கு அனுப்ப நினைப்பவர்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து பின் மனிதனைக் கடித்தது என்ற பழமொழிக்கு ஏற்ப முதலில் கட்சியிலிருந்து பிரிந்து, பின் சின்னம் முடக்கப்பட்டு, இப்போது ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறார்கள் ஓபிஎஸ் அணியினர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

2021 நாங்கள் தான்
அதிமுக-வின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. அனைத்து வகை நலத்திட்டங்களும் சரியாக செயல்படுத்தப் படுகின்றன. எனவே, 2021 வரை நாங்கள் தான் ஆட்சியில் இருப்போம் என்றும் அவர் கூறினார்.

ஸ்டாலினின் ஊதுகுழல்
ஸ்டாலினின் ஊதுகுழலாக ஓபிஎஸ் அணியினர் செயல்படுவதாகவும் அவர் கூறினார். ஓபிஎஸ் அணியுடனான இணைப்பு குறித்து பேசிய அவர், பிரிந்து சென்றவர்கள் வெறும் 2% பேர் தான்.

நாங்கள் தயார்
அவர்கள் இணைய வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்தால் அதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இணைவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications