போலீஸ் மீதான தாக்குதல் குறித்து ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது : அமைச்சர் ஜெயக்குமார்
போலீஸ் மீதான தாக்குதல் குறித்து ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : போலீஸார் மீதான தாக்குதல் குறித்து ரஜினி தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்று சேப்பக்கம் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில், சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என்று, ரஜினி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், வன்முறை கலாச்சாரத்தை கிள்ளி எறியவில்லை என்றால் பேராபத்து என்றும் நடிகர் ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், போலீஸார் மீதான தாக்குதல் குறித்த ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது.
எந்தபிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. தமிழக அரசு ஒரு போதும் வன்முறையை ஏற்காது. போராட்டத்தில் காவல்துறையினரை தாக்கியவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டில் தமிழகம் கலந்துகொள்ளாததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்கு தேவையில்லாத விளக்கங்கள் கற்பிக்க வேண்டாம் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.