அடேங்கப்பா அப்பல்லோ.. இந்த அண்டப்புளுகு ஏனப்பா?
மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு வெறும் காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு என்று மருத்துவமனை கூறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: சுய நினைவின்றி அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு வெறும் காய்ச்சல் என்று மட்டும் கூறியது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது.
இந்நிலையில் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல என்பது போன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
களஆய்வு
ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது அவர் எந்த நிலையில் இருந்தார் என்பது குறித்தும் நோயாளியை பற்றிய அப்பல்லோ குறிப்புகளும் புதிய தலைமுறையின் களஆய்வில் கிடைத்துள்ளன. அதில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது சுயநினைவின்றி இருந்தார்.
Recommended Video
உடல் மட்டுமே அசைந்தது
அவரது உடல் மட்டும் அசைந்தது. ஆனால் அவரிடம் இருந்து எந்தவித எதிர்வினையும் கிடைக்கவில்லை. ரத்தத்தின் சர்க்கரை அளவு 508 எம்.ஜி. உள்ளது. ரத்த அழுத்தம் 140/70 என்ற அளவில் இருந்தது. அவரது நுரையீரலில் நோய் தொற்று காரணமாக அவரால் இயல்பாக சுவாசிக்க முடியவில்லை என்றும் அந்த அறிக்கையில் உள்ளது.
அப்பல்லோவின் முதல் அறிக்கை
இந்நிலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அடுத்த நாள், அதாவது செப்.23-ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் அவர் காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் வழக்கமான உணவை உட்கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய் கூறியது ஏன்?
ஜெயலலிதா சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டார் என்று அந்த மருத்துவமனையின் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது அவரது உடல்நிலை குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கை கூறுகிறது. ஆனால் வெறும் காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு என்று பொய் கூறியது ஏன்? அப்படியானால் பிற அறிக்கைகளின் நம்பகத்தன்மை பற்றியும் மக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது.
சர்க்கரை அளவை கண்காணிக்காதது ஏன்?
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது ரத்தத்தில் அவரது சர்க்கரையின் அளவு 508 எம்.ஜி.யாக இருந்தது. அதற்கு முன்பு அவருக்கு 300 எம்.ஜி வரை இருந்த நிலையில் இதை 500 வரை அதிகரிக்கவிட்டது ஏன் ? என்று கேள்வி எழுந்துள்ளது. சாதாரணமாக சர்க்கரை நோயாளிகள் வீட்டில் இருந்தபடியே தங்கள் ரத்த சர்க்கரை அளவை சோதிக்கும் ஏராளமான கருவிகள் உள்ள நிலையில் ஜெயலலிதாவுக்கு அதுபோல் சோதனை செய்து அதற்கேற்றாற்போல் சிகிச்சை மேற்கொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எப்படி இனிப்பு சாப்பிட்டார்?
ஜெயலலிதா மருத்துவமனையில் இனிப்பு சாப்பிட்டார், திராட்சை சாப்பிட்டார், இட்லி சாப்பிட்டார் என்று சில அதிமுக நிர்வாகிகள் கூறினர். சர்க்கரை நோயாளிக்கு எப்படி இனிப்பு வழங்கப்பட்டது, இட்லி வழங்கப்பட்டது என்ற கேள்விகள் எழுகின்றன.
பயமுறுத்தக் கூடாது என்ற எண்ணமா?
ஜெயலலிதாவின் உண்மை நிலையை தமிழக அரசு வெளியிட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை ஜெயலலிதா சுயநினைவின்றி இருந்தார் என்று கூறினால் அது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் வெளியிடாமல் இருந்திருக்கலாம் என்று அதிமுக வட்டாரங்கள் இப்போது கூறுகின்றன. எது எப்படியோ அவரது மரணத்தில் இன்னும் அவிழ்க்கப்பட வேண்டிய மர்மமுடிச்சுகள் ஏராளமாக இருக்கும் என தெரிகிறது.