யாரை மாற்றினாலும் இந்த ஒரு வேட்பாளரை மட்டும் ஜெயலலிதா மாற்றவே மாட்டார்!
சென்னை: அதிமுக என்றால் அதிரடி என்பது போக கூடவே குழப்படி என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். எப்போதுமே இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. இப்போதும் அதுதான் நடந்து வருகிறது.
எல்லோருக்கும் முன்பாக வேட்பாளர்களை அறிவிப்பார் ஜெயலலிதா. அறிவித்த அதே வேகத்தில் வேட்பாளர்களை மாற்ற ஆரம்பிப்பார்.
முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் அந்த சந்தோஷத்தை விட்டு விலகும் முன்பாகவே அடுத்த வேட்பாளரை அறிவிப்பது ஜெயலலிதா ஸ்டைல். இதுதான் ஜெயலலிதா பாணி என்பதால் எந்த வேட்பாளருமே வேட்பு மனு வாபஸ் பெறப்படும் நிமிடம் வரை முழுமையான சந்தோஷத்தில் இருந்ததாக சரித்திரமே கிடையாது.

இப்போதும் கூட 234 தொகுதிகளிலும் இரட்டை இலையை பதிக்கும் வகையில் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார் ஜெயலலிதா. 227 இடங்களில் அதிமுக போட்டியிடும், மீதமுள்ள 7 இடங்களில் இரட்டை இலைச் சின்னத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் என்று அறிவித்தார் ஜெயலலிதா.
இதனால் ஏற்பட்ட பரபரப்பிலிருந்தே இன்னும் தமிழகம் மீளாத நிலையில் தற்போது அதிரடியாக வேட்பாளர்களை மாற்றி வருகிறார் ஜெயலலிதா. நேற்று ஒருவர் மாற்றப்பட்டார். இன்று 4 முறை மாற்றம் நடந்துள்ளது. இன்னும் இரவு இருக்கிறது. அதற்குள் யாரேனும் மாற்றப்படுவார்களா என்பது தெரியவில்லை.
அறிவிப்பதையும், மாற்றுவதையும் யாரும் கேள்வி கேட்க முடியாது, விமர்சிக்கவும் முடியாது.. காரணம் அது அவரது உரிமை.. ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. யாரை மாற்றினாலும் ஒரு வேட்பாளரை மட்டும் ஜெயலலிதாவால் நிச்சயம் மாற்ற முடியாது, அவரும் மாற்ற மாட்டார்..!
அவர் .. வேறு யார்.. சாட்சாத் ஜெயலலிதாவேதான்!












Click it and Unblock the Notifications