ஜெ. வழக்குத் தீர்ப்பு மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்: தமிழிசை கருத்து
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குத் தீர்ப்பு மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு எதிராக கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பினால் தமிழக முதல்வர் பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவியை இழக்கிறார் ஜெயலலிதா. இத்தீர்ப்புத் தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தமிழக முதல்வருக்கு எதிராக இத்தீர்ப்பு வெளியாகி இருப்பது, நாட்டில் சட்டம் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.
அதேபோல், சட்டத்திற்கு முன் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப் பட வேண்டும் எனக் கூறியுள்ள தமிழிசை, மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றும், வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications