நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பே இறுதித் தீர்ப்பல்ல…. நீதி விண்ணுயர எழுந்து நிற்கும்: கருணாநிதி
சென்னை: நீதியின் ராஜபாட்டையில் எத்தனை தடைக்கற்களைக் குவித்தாலும் அவற்றைப் படிக்கற்களாக்கிக் கொண்டு இறுதியில் நீதி விண்ணுயர எழுந்து நிற்கும். வெற்றி முரசம் ஒலிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தான் சட்டத்தை நிமிர்த்தி நேர்வழிப்படுத்திட வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: ''11-5-2015 அன்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, தனது தீர்ப்பில் ஜெயலலிதாவை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்தார். அதனை அ.தி.மு.க.வினர் எதிர்பாராதது நடந்தே விட்டது என எண்ணி வெற்றியாகக் கொண்டாடினர். ஜெயலலிதாவும் தனது மனசாட்சிக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போட்டு நெடுந்துயில் கொள்ளச் செய்துவிட்டு நீதி வென்றதாக அறிக்கை விடுத்தார்
நம்மைப் பொறுத்தவரையில் நீதிபதி குமாரசாமி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தியபோது கூறிய மொழிகளுக்கும், வழங்கிய தீர்ப்புக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறதே என்ற சந்தேகம் வந்தது. ஜெயலலிதா தரப்பினர் இந்தியன் வங்கியிலே 10 முறை கடன் பெற்ற தொகைகளை எல்லாம் நீதிபதி குமாரசாமி, வரிசையாகக் குறிப்பிட்டு, அதையெல்லாம் கூட்டி 24 கோடி ரூபாய் அவர்கள் கடனாகப் பெற்றிருப்பதாகவும், அந்தத் தொகையை வருவாயாக எடுத்துக்கொண்டால், ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு அவருடைய உண்மையான வருமானத்தில் 8 சதவீதம்தான் என்றும், அவ்வாறு 10 சதவீதத்திற்குக் குறைவாக வருவாய்க்கு அதிகமாகச் சொத்து சேர்க்கப்பட்டிருந்தால், அதனைக் குற்றமாகக் கருதி தண்டனை வழங்கத் தேவையில்லை என்றும் எழுதித்தான் இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா தரப்பினரை விடுதலை செய்திருக்கிறார்.

தவறான புள்ளி விபரங்கள்
இந்த விவரங்கள் உண்மையானவையாக, நிரூபிக்கக் கூடியவையாக இருந்தால், ஜெயலலிதாவின் விடுதலை பற்றி இருவேறு கருத்துகளுக்கே இடம் கிடையாது. ஆனால் ஜெயலலிதா தரப்பினர் இந்தியன் வங்கியில் இருந்து பெற்ற கடன்கள் என்று வரிசையாகப் பட்டியலிட்டு, அதன் கூட்டுத் தொகை 24 கோடி ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பிலே தெரிவித்திருப்பது முற்றிலும் தவறான புள்ளி விவரமாகும்.

கடன் தொகை எவ்வளவு
எப்படியென்றால், ஜெயலலிதா தரப்பினர் 10 முறை இந்தியன் வங்கியிலே கடன் பெற்ற அந்த 10 தொகைகளையும் கூட்டினால், 10 கோடி ரூபாய்தான் வருகிறதே தவிர, நீதிபதி தெரிவித்தவாறு 24 கோடி ரூபாய் என்று கூட்டுத்தொகை வர வாய்ப்பே இல்லை. உண்மையான கூட்டுத் தொகையின்படி பார்த்தால், ஜெயலலிதா அவருடைய வருவாயை விட 76 சதவீதம் கூடுதலாகச் சொத்துக் குவித்திருக்கிறார். 76 சதவீதம் என்பதுகூட தவறு; எல்லா தவறுகளையும் சேர்த்தால் 119 சதவீதத்திற்கு மேல் சொத்துகளை ஜெயலலிதா குவித்துள்ளார் என்றும் அதன்படி அவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருத்துகள் கூறப்படுகின்றன.

இமாலய தவறு
அது மாத்திரமல்ல; வருவாய்க்கு மேல் சொத்துக்குவிப்பு 10 சதவீத அளவுக்குள் இருந்தால், அதற்குத் தண்டனை இல்லை என்ற விதி, தற்போது நடைமுறையிலே உள்ள ஊழல் தடுப்புச் சட்டத்திலே இடம் பெறவில்லை என்றும், 1988 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போதே இந்தச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தில் அப்படிப்பட்ட ஓர் அம்சம் இடம் பெறவில்லை என்றும் விரிவாகவும், விளக்கமாகவும் பலராலும் எடுத்துக் கூறப்பட்டது. இந்த விவரங்களை எல்லாம் பலரும் எடுத்துக் காட்டி, தீர்ப்பின் அடிப்படையிலேயே இவ்வாறு இமாலயத் தவறு உள்ளது, எனவே இந்தத் தீர்ப்பை மாற்ற வேண்டும், அதற்கு உதவியாக இந்த வழக்கில் முக்கிய முதல்நிலைப் பங்காற்றி வரும் கர்நாடக அரசு தானே உச்ச நீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் உணருமா?
இந்த வழக்கினைச் சட்ட விதிமுறைகளின் இயல்பான அடுத்த கட்டமாக மேல்முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படாமலேயே தடுத்து சட்டத்தின் வாயை அடைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.
"கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிர்காலத்தில் பல தவறான தீர்ப்புகளுக்கு முன்னோடியாக அமைந்து விடக்கூடும். உலகம் இந்தியாவைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் தருணம் இது என்பதை உச்ச நீதிமன்றம் உணர வேண்டும்.

ஆய்வுக்கு உரியதா?
நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு இந்திய நீதித்துறைக்கு உலகில் நிலவி வரும் மதிப்பையும் மாண்பையும் வெகுவாகக் குறைத்து விட்டது. எனவே உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை கூர்மையாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்திட வேண்டும்" என்றெல்லாம் இந்த வழக்கு பற்றி கருத்துகள் சமூக அக்கறை கொண்ட பல செய்தியாளர்களாலும், ஓய்வு பெற்ற நீதிபதிகளாலும் ஏடுகளில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இறுதி தீர்ப்பு அல்ல
இந்த உண்மையைச் சட்டப்படி நிலைநாட்டிட வேண்டிய கடமை அனைவர்க்கும் உண்டு. மேலும் ஜனநாயகத்தின் மிக முக்கிய அங்கமான நீதித்துறை மீது படிந்துள்ள களங்கம் துடைக்கப்பட வேண்டும் என்று சட்ட விற்பன்னர்களும், நடுநிலைப் பத்திரிகையாளர்களும், சமூக ஆர்வலர்களும் பெரிதும் விரும்புகிறார்கள். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பே இறுதித் தீர்ப்பல்ல. இந்திய உச்ச நீதிமன்றம் தான் நீதிதேவனுக்கு நேர்ந்து விட்ட மயக்கத்தைக் கலைத்து வளைந்து விட்ட சட்டத்தை நிமிர்த்தி நேர்வழிப்படுத்திட வேண்டும்.

யாருக்கு பொறுப்பு?
இந்த வழக்கில் மேல் முறையீடு செய்திட வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசுக்கும், சுப்ரமணியம் சுவாமிக்கும் இருப்பதைப் போல தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்குத் தலை வணங்கி மேல் முறையீடு செய்திட வேண்டிய பொறுப்பு தி.மு.க.வுக்கும் உண்டு என்பதால்தான், 25-5-2015 அன்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்திலே "இந்த வழக்கினில் பங்கேற்க தி.மு.க.விற்கு உரிமை உண்டு என 2 முறை உச்ச நீதிமன்றத்தால் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா மீதான இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கிலே உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க.வும் மேல் முறையீடு செய்யும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்ற அறிவிப்பினைச் செய்திருக்கிறேன்.
நீதியின் ராஜபாட்டையில் எத்தனை தடைக்கற்களைக் குவித்தாலும் அவற்றைப் படிக்கற்களாக்கிக் கொண்டு இறுதியில் நீதி விண்ணுயர எழுந்து நிற்கும். வெற்றி முரசம் ஒலிக்கும்" என்று கூறி உள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications