4 ஆண்டுகளில் நாலாபுறமும் வளர்ச்சி.. மின்வெட்டே இல்லாத நிலை... சுதந்திர தின விழாவில் ஜெ. பெருமிதம்
சென்னை: தமிழகத்தில் 4 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் நாலாபுறமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் மின்வெட்டே இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 69 ஆவது சுதந்திரம் தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
பின்னர் அவர் ஆற்றிய சுதந்திர தின உரை:
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற இலட்சியத்திற்காக அரசு செயல்படுகிறது. 4 ஆண்டுகளில் கிட்டதட்ட 6 லட்சம் பெண்கள் திருமண உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற்றனர்.
நான்காண்டு வளர்ச்சியில் நாலாபுறமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் தமிழகத்தில் மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து வீர நெஞ்சங்கள் மற்றும் தலைவர்கள் அனைவரையும் நினைவு கூறுவதற்காக இந்த நாளை நாம் கொண்டாடி வருகிறோம். சுதந்திரத்தின் அச்சாணியாக விளங்குவது பொருளாதார சுதந்திரம்.
கடந்த 4 ஆண்டுகளில் 54 கல்லூரிகள் துவங்கப்பட்டு கல்வி வளர்ச்சிக்கும், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.10,000-ல் இருந்து ரூ. 11,000 ஆக உயர்த்தப்படும். வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுசகோதரர்கள் உள்ளிட்டோரின் வழிதோன்றல்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூபாய் 4,500 லிருந்து ரூபாய் 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.