ஜெயலலிதா பிறந்தநாளுக்கு கோவில்களில் கோலாகலம்: அமைச்சர்கள் பங்கேற்ற கோ பூஜை, யாகங்கள், ஹோமங்கள்
சென்னை: முதல்வரின் மனதை குளிர வைக்க வேண்டுமென்பதில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்களுக்குள் பெரும் போட்டா போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அரசு செலவில் நேற்று 122 கோயில்களில் இன்று காலையில் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடந்தன. அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் யாகங்களும், அமைச்சர் வளர்மதி பங்கேற்ற கோ பூஜையும் கோவில்களில் அமர்களமாக நடந்தேறியது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் 24ம் தேதி வருகிறது. அவரது பிறந்தநாளையொட்டி கோயில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு அதிமுகவினர் முன்பதிவு செய்து வைத்துள்ளனர். பொதுமக்கள் அன்னதானம் கொடுக்க, வரும் 24ம் தேதி வரை யாருக்கும் நேரம் ஒதுக்க கூடாது என்று அறநிலையத்துறை மூலம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் மாசி மகம் நட்சத்திரமான நேற்று அரசு செலவில் சென்னையில் 14 கோயில்கள் உட்பட தமிழக முழுவதும் 122 கோயில்களில் சகஸ்ரநாம பூஜை, சுதர்சன ஹோமம், சண்டி ஹோமம், ருத்திர திரிசதி பூஜை, ஆயுஷ்ய ஹோமம், நவகலச பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜை நடைபெற்றது.

எத்தனை எத்தனை யாகங்கள்
எதிரிகளை வீழ்த்த சண்டிஹோமமும், உடல் ஆராக்கியத்துடன் வாழ சுதர்சன ஹோமமும், சிவனை குளிர்வித்தால் நன்மை கிடைக்கும் என்பதற்காக ருத்ரயாகமும் நடத்தப்பட்டது. இது போன்று வழக்கு பிரச்னைகளை தீர்க்கவும், ஆட்சியை கைப்பற்றுவதற்கும், பாவங்களை போக்குவதற்கும் இந்த பூஜை நடத்தப்பட்டது.

ஓ.பி.எஸ் தலைமையில் யாகம்
சென்னை பிராட்வேயில் உள்ள காளிகாம்பாள் கோவிலில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுகவினர் சிறப்பு யாகம் அமைத்து வழிபாடு நடத்தினர்.

இரட்டை இலை அலங்காரம்
யாக குண்டத்தின் முன்பு இருந்த அம்மனுக்கு அதிமுக சின்னமான இரட்டை இலை வடிவத்தில் பூ அலங்காரம் செய்திருந்தனர்.

கபாலீஸ்வரர் கோவிலில் ஜெ. படத்துடன் பூஜை
சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் முதல்வர் படத்தை முன்னால் வைத்து 50க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பூஜை செய்த சம்பவமும் நடந்தது. சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பூஜையின் போது, முதல்வர் படத்தை ஆயிரக்கணக்கான பெண்கள் வைத்திருந்தபடி இந்த பூஜையில் ஈடுபட்டனர். இதே போன்று

பசுக்களுக்கு பூஜை
பாவங்களை போக்குவதற்காக சென்னை பார்த்தசாரதி கோயில் சார்பில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு பூஜை செய்யப்பட்டது. அமைச்சர் வளர்மதி சார்பில் கோ பூஜை நடத்தப்பட்டது. இதே போன்று தமிழகம் முழுவதும் முருகன், சிவன் கோயில்களில் காலை 6 மணி முதல் 7 மணிக்கும், அம்மன் கோயில்களில் 10.30 மணி முதல் 11.30 மணிக்கும், பெருமாள் கோயில்களில் காலை 9 மணி முதல் 10 மணிக்கு இந்த பூஜை நடத்தப்பட்டது.

ஜெ. படத்துடன் பூஜை
முதல்வரின் பிறந்த நாளையொட்டி அரசு செலவில் முதல்வருக்காக கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பூஜையிலும் ஏராளமான பெண்கள் அதிகாலையிலேயே வரவழைக்கப்பட்டு அவர்களிடம் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை கையில் கொடுத்து அமர வைத்து சிறப்பு பஜைகள் நடத்தப்பட்டன.

பெண்களுக்கு பரிசு
ஜெயலலிதாவின் படங்களை கீழே வைக்கக் கூடாது பூஜை முடியும் வரை மடியில் அல்லது நெஞ்சோடு அனைத்து வைத்திருக்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு ஜெயலலிதாவின் படத்துடன், பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் பெண்கள் ஜெயலலிதாவின் படத்தை மடியிலேயே வைத்திருந்தனர்.

தையல் மிஷின்
பூஜையில் பங்கேற்ற பலருக்கும் தையல் மிஷின் வழங்கப்பட்டது இதனை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார். சிலருக்கு புது புடவைகள், வீட்டு உபயோகப் பொருட்களும் வழங்கினார் அமைச்சர் வளர்மதி.

தடபுடல் விருந்து
பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோவில்களில் வடை பாயாசத்துடன் தடபுடலாக அன்னதானமும் வழங்கப்பட்டது. அமைச்சர்களே பார்த்து பார்த்து பரிமாறினர்.

பூஜையிலும் ஸ்டிக்கர்
ஸ்டிக்கர் அரசாங்கம் என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், நேற்யை பூஜையில் ஜெயலலிதாவின் படத்தை மடியிலும், நெஞ்சோடு வைத்து பூஜை செய்ய வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விதிகளை மீறி அரசு செலவில் சிறப்பு பூஜைகள், யாகம் நடத்தியிருப்பதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பச்சை குத்துறாங்களாம்
இது ஒருபுறம் இருக்க 668 பேருக்கு ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தியதோடு பரிசும் வழங்கியுள்ளார்களாம். அப்போ இனி வாழ்நாள் முழுவதும் ஜெ. ஸ்டிக்கரை சுமந்து கொண்டுதான் அலைவார்கள் போலயே?












Click it and Unblock the Notifications