"அம்மா ரிட்டர்ன்ஸ்"... மெரினாவில் குவிந்த அதிமுகவினர் – தலைமைச் செயலகம் வரை போக்குவரத்து தடை!
சென்னை: தமிழக முதல்வராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று பதவியேற்றதை முன்னிட்டு கடற்கரை காந்தி சிலையில் இருந்து தலைமை செயலகம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு பதவியேற்றார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. அவ்விழாவிற்காக போயஸ் தோட்டத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டார் ஜெயலலிதா

இவ்விழாவில் ஜெயலலிதாவுடன் கூடவே 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்காக சென்னை மெரினா கடற்கரை சாலையில் அதிமுக தொண்டர்கள் கரைபுரண்ட வெள்ளமென திரண்டிருந்தனர். கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே பெரிய திரைகளில் பதவியேற்பு விழா ஒளிபரப்பானது.
கடற்கரை சாலையில் 8 கி.மீ தொலைவிற்கு காலை முதலே அணிவகுத்து நின்றிருந்தனர் அதிமுக தொண்டர்கள். எழிலகத்தின் மாடியில் இருந்து ராட்சத பலன்களில் காமிராக்கள் பொருத்தி போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்ட ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் விழா நடைபெறும் இடத்தைச் சென்றடைந்து, பதவியேற்பு விழா முடிந்து திரும்பும் வரையில் காந்தி சிலை முதல் தலைமைச் செயலகம் வரையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications