மாநில முதல்வர் வீட்டில் ஏன் ஆம்புலன்ஸ் இல்லை? ஜெயலலிதா விவகாரத்தில் எழும் சந்தேகம்
போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத சமயத்தில் ஆம்புலன்ஸ் ஏன் நிறுத்திவைக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
Recommended Video

சென்னை : செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் அவருக்கு உடனடி உதவிக்கு ஏன் வீட்டு வாசலிலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருடைய உடல்நிலை எந்த நிலையில் இருந்தது என்பது தொடர்பாக அறிக்கையை புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 10 மணிக்கு ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அப்பலோ மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 10.25 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்ததாக தெரிகிறது.
ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. முதல்வர் வெளியே செல்லும் போது அவருடன் எப்போதுமே ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மருத்துவர்கள் குழு உடன் செல்வர். ஆனால் முதல்வர் இல்லம் அருகே அன்றைய தினம் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர் குழு இல்லாதது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மருத்துவர் ஏன் உடன் இல்லை?
மேலும் ஜெயலலிதாவிற்கு செப்டம்பர் 22ம் தேதிக்கு முன்னரே 3 நாட்களாக விட்டு விட்டு காய்ச்சல் இருந்ததாகவும், நோய் தொற்று இருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தான் மற்றொரு சந்தேகம் எழுகிறது. 3 நாட்களாக விட்டு விட்டு காய்ச்சலும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் ஒருவருக்கு, அதிலும் முதல்வருக்கு மருத்துவர் ஒருவரை உடன் அமர்த்தி பரிசோதனை செய்யாதது ஏன்?

சுவாசப் பிரச்னை
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு சுவாசப் பிரச்னை இருந்துள்ளது. அதாவது அவருடைய மூச்சுவிடும் திறன் 48 சதவீதம் என்ற அளவில் தான் இருந்துள்ளது.

சுவாசக் கோளாறு ஏன் சரிசெய்யப்படவில்லை
3 நாட்களாக விட்டு விட்டு காய்ச்சல் நோய் தொற்று இருப்பவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட வாய்ப்பிருக்கும் என்று ஏற்கனவே சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு தெரியாதா? அப்படி இருக்கும் பட்சத்தில் முதல்வர் பொறுப்பில் இருந்த ஒருவருக்கு வீட்டிலேயே வைத்து சுவாசப் பிரச்னையை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

சர்க்கரை அளவை ஏன் கவனிக்கவில்லை
சர்க்கரையின் அளவு 508 என்ற அளவிற்கு செல்லும் வரை அதனை சோதிக்காதது ஏன். சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ள பல்வேறு உபகரணங்கள் இருக்கும் போது அதை கவனிக்காமல் ஏன் விட்டார் சசிகலா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தக் கேள்விகளுக்கான விடைகளை விசாரணை ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications