ஜெயலலிதாவுக்கு மீண்டு்ம் ஒர்க்அவுட் ஆன 7 ராசி…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அதிகம் குவிந்துள்ளனர். பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவுக்கு 7ம் எண் ராசியானது என்பது மீண்டும் ஒரு முறை இன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக அதிமுகவினர் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
ஏனெனில் இன்றைய தினத்தின் 17-10-2014 கூட்டுத் தொகை 7 என்பதுதான் அதிமுகவினர் மகிழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.
7ஆம் எண் ராசி
ஜெயலலிதாவுக்கு முந்தைய ஆண்டுகளில் ராசி எண் 9 என்று கூறப்பட்டது. இதனால் ஜெயலலிதா பல்வேறு முக்கிய முடிவுகளை 9-ம் தேதி தான் எடுப்பார். மேலும் அவரது செயல்பாடுகள் அனைத்தும் கூட்டுத் தொகை 9 வருமாறு அமைத்துக் கொண்டார். ஆனால் தற்போது, அவர் 9-க்கு விடுதலை கொடுத்துவிட்டு 7-ம் எண்ணுக்கு மாறிவிட்டார்.
முதல்வரான நாள்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக 16-5-2011 பொறுப்பேற்றார். பதவியேற்ற நாள் 16. இதன் கூட்டுத்தொகை 7.
7 கையெழுத்து
ஜெயலலிதா அமைச்சரவையில் 33 அமைச்சர்கள். ஆனால் ஜெயலலிதாவைச் சேர்த்து 34. இதன் கூட்டுத் தொகை 7. பதவியேற்ற பிறகு புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதல்வர் அறையில், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 7 கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
விடுதலையான தேதி
ஜாமீன் கிடைத்த நாளான இன்று 17.10.2014 என, கூட்டு எண் 7 என்றும், இன்று அதிமுக.,வின் 43 வருட துவக்க நாள் என்றும் அதிலும் 7 வருவதாகவும் கூறி, இரட்டை லட்டு இனிப்பு என அதிமுகவினர் இரு மகிழ்ச்சியையும் சேர்த்துக் கொண்டாடி வருகின்றனர்.
எப்படியோ நம்பர் ஒர்க் அவுட் ஆகிருச்சே!