ஜெயலலிதா உருவப்பட திறப்பு சட்டப்படி நடக்க வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பு சட்டப்படி நடைபெற வேண்டும் திருமாவளன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பு சட்டப்படி நடைபெற வேண்டும் திருமாவளன் வலியுறுத்தியுள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மத்திய அரசின் சி.பி.ஐ, வருமான வரி துறை, அமலாக்க பிரிவு போன்றவை மத்திய அரசின் ஏவலாளிகளாக செயல்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதனை பிரதமர் மோடி ஜூலை மாதத்தில் ஒரு நாள் திறந்து வைப்பார் என்றும் அவர் கூறினார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரின் படத்தை சட்டசபையில் திறப்பது மறைந்த தலைவர்களுக்கு செய்யும் அவமரியாதை என்றும் திமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
சட்டப்படி நடக்க வேண்டும்
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்பட திறப்பு சட்டப்படி நடக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
குண்டர் சட்டத்திற்கு கண்டனம்
மெரினாவில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அமைதியாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியவர்களை போலீசார் கைது செய்தனர் என்றார். அவர்களில் திருமுருகன் உட்பட நான்கு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசின் கைப்பாவை
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மத்திய அரசின் சி.பி.ஐ, வருமான வரி துறை, அமலாக்க பிரிவு போன்றவை மத்திய அரசின் ஏவலாளிகளாக செயல்படுகிறது என்றும் திருமாவளவன் குற்றம்சாட்டினார். மத்திய அரசின் கைப்பாவையாக தான் அதிமுக செயல்படுகிறது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
திருமாவின் திடீர் மாற்றம்
இதுவரை அதிமுகவுக்கு சாதகமாகவே பேசி வந்த திருமாவளவன், சட்டசபையில் ஜெயலலிதா படத்தை சட்டப்படி திறக்க வேண்டும் என கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன என்றும் கேள்வி எழுந்துள்ளது.