திமுக ஆட்சியை விட எங்க ஆட்சியில் குற்றங்கள் ரொம்பக் கம்மி... "ரமணா"வாக மாறிய ஜெ.!
சென்னை : அகில இந்திய அளவில் ஆண்டுக்காண்டு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே குற்றங்கள் குறைந்து வருகின்றன என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
2015-2016-ஆம் ஆண்டிற்கான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பின் தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலுரையில் கூறியதாவது...
தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருவதாக உண்மைக்கு மாறான ஒரு குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருவதால், உண்மையை தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சில புள்ளி விவரங்களை நான் இங்கே தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
கடந்த 2005 ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 1,366 ஆக இருந்தது. ஆனால் 2010ல் கடந்த திமுக ஆட்சியின் இறுதியில் அது 1,715 ஆக உயர்ந்திருந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த கொலைகளின் எண்ணிக்கை 1,678 என குறைந்துள்ளது.
இதே போல், ஆதாயக் கொலைகள் கடந்த திமுக ஆட்சியில் 74-ல் இருந்து 153 ஆக உயர்ந்தது. 2014ஆம் ஆண்டு இது 127 ஆக குறைந்துள்ளது. கூட்டுக் கொள்ளைகளைப் பொறுத்தவரை கடந்த திமுக ஆட்சியில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 3.3 சதவீதம் அதிகரித்து வந்துள்ளன. ஆனால் 2011 ஆம் ஆண்டு 101 கூட்டுக் கொள்ளை வழக்குகள் தாக்கலாகியுள்ள நிலையில் 2014 ஆம் ஆண்டும்,அதே எண்ணிக்கையிலான கூட்டுக் கொள்ளை வழக்குகள் தாக்கலாகி உள்ளன. அதாவது இந்த வழக்குகள் அதிகரிக்கவில்லை.
கொள்ளைகளைப் பொறுத்தவரை கடந்த திமுக ஆட்சியில் ஆண்டொன்றுக்கு 63 சதவீதம் அதிகரித்து வந்துள்ளன. 2011ஆம் ஆண்டு 2,066 என இருந்த கொள்ளை வழக்குகள் 2014ஆம் ஆண்டு 1,969 என குறைந்துள்ளன. 2010ஆம் ஆண்டு கடந்த திமுக ஆட்சியில் 14,583 களவு வழக்குகள் தாக்கலாகி இருந்தன. 2014 ஆம் ஆண்டு இவை 11,969 என குறைந்துள்ளன. அதாவது, 17.9 சதவீதம் குறைந்துள்ளது.
அகில இந்திய அளவில் ஆண்டுக்காண்டு குற்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே குற்றங்கள் குறைந்து வருகின்றன என்பதை நான் இங்கே தெரிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.