வேட்பாளர் பட்டியலை கலைத்து போடும் ஜெயலலிதா.. கலக்கத்தில் அதிமுகவினர்
சென்னை: வேட்பாளர் பட்டியலை மாற்றியமைக்க ஆரம்பித்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா நடவடிக்கையால் அதிமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டடணி கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முத்துராஜா மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக சிட்டிங் எம்.எல்.ஏ. வைகைச் செல்வன் மீண்டும் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடுவார் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மாஜி அமைச்சர்
இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். அதிமுகவின் இளைஞர் பாசறை செயலாளர், அரசு கொறாடா என பல பதவி வகித்தவர் வைகைச் செல்வன்.

குளறுபடி தொடர்கதை
தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியலில் குளறுபடி வருவது என்பது அதிமுகவுக்கு புதிது கிடையாது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது, அதிமுக கூட்டணிப் பேச்சு வார்த்தையில் தேமுதிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், ஆகிய பிரதான கட்சிகள் இருந்தன. ஆனால், யாரும் எதிர்பார்க்காமல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

காலையில் சூப், மாலையில் ஆப்பு
அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாமே கோபப்படும் வகையில் முதல் பட்டியலை 2011ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி இரவு வெளியிட்டார் ஜெயலலிதா. இதில் விஷேசம் என்னவென்றால், அன்றைய தினம் காலையில்தான் யாருக்கு எந்த இடம், எவ்வளவு சீட் என்பது குறித்த கூட்டணிப் பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருந்தது. கூட்டணியினரின் கோபத்தால், பட்டியலை முழுமையாக மாற்றி, புதிய பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார்.

தர்ம சங்கடம்
முதலில் வெளியான பட்டியல் ஜெயலலிதா அனுமதியின்றி, அவரின் தோழி சசிகலா தரப்பில் இருந்து வெளியானது என்ற தகவலும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், இப்போது வெளியான பட்டியலும், கூட்டணியினருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பட்டியல் மாறலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

கிலி
இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப வைகை செல்வனுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. வாசன் கட்சிக்கும் 15 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. எந்தெந்த தொகுதிகளில் யார் யாரை மாற்றுவார்களோ என்று வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் கிலியோடு உலவுகிறார்கள்.












Click it and Unblock the Notifications