கருணாநிதியை விமர்சிக்கும் ஜெயலலிதா, மக்கள் நல கூட்டணி பற்றி வாய் திறக்காதது ஏன்?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரங்களின்போது, திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும், காரசாரமாக விமர்சனம் செய்துவரும் நிலையில், மக்கள் நல கூட்டணி குறித்தோ, அதன் தலைவர்கள் குறித்தோ, அதிலும் விஜயகாந்த் பற்றியோ எதுவுமே பேசாமல் உள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த பிரச்சார யுக்திக்கு சில காரணங்கள் இருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
சமீபகாலத்தில், கருணாநிதியைவிட, ஜெயலலிதாவை அதிகம் விமர்சனம் செய்தது, வைகோ, விஜயகாந்த், பிரேமலதா போன்ற மக்கள் நல கூட்டணி தலைவர்கள்தான்.

பதிலடி இல்லை
ஜெயலலிதா பிரசார கூட்டங்களில் பங்கேற்று வரும் நிலையில், மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு அவர் எந்த பதிலடியும் தரவில்லை. மறந்து கூட அவர்கள் பெயர்கள் தனது வாயில் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.

பழைய கதை
இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: 2006 சட்டசபைத் தேர்தலில், விஜயகாந்த் பெரும் வளர்ச்சி பெற்றதை ஜெயலலிதா கண்கூடாக பார்த்து மிரட்சி அடைந்தார்.

பிரித்த வாக்குகள்
தனித்துப் போட்டியிட்டு எட்டு சதவீத வாக்கு வாங்கியதும், பெரும்பாலான தொகுதிகளில் ஐந்தாயிரம், பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்கள் தோற்றுப் போனதற்கும் விஜயகாந்த்தான் காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.

கூட்டணிக்குள்
இதனால்தான், விஜயகாந்த்தை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவந்து 2011 சட்டசபை தேர்தலை ஜெயலலிதா சந்தித்தார். இதன்பிறகு இரு தலைவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணி உடைந்தது.

அவ்வளவுதான்
2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தைக்கூட பெற முடியாமல் மோசமான தோல்விக்குத் தள்ளப்பட்டார் விஜயகாந்த். இதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்த ஜெயலலிதா, இனி விஜயகாந்த் தேறப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

வாக்கு சிதறல்
விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால், அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்களை இனிமேல் பெறப்போவதில்லை என்பது ஜெ. கணக்கு. பாஜகவோடு அணி அமைத்ததால், கிறிஸ்தவ, முஸ்லிம் ஓட்டுக்கள் கிடைக்காது என்றும், பாமகவுடன் கூட்டு வைத்ததால் தலித் வாக்குகளை இழந்துவிடுவார் என்றும் உளவுத்துறை ஜெயலலிதாவுக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம்.

வன்னியர் வாக்குகளும்
இப்போது திருமாவளவனோடு கூட்டணி வைத்துள்ளபோதிலும், தலித் வாக்குகள் திரும்பி வருமோ இல்லையோ, வன்னியர் வாக்குகள் கிடைக்காது என்பதும் உளவுத்துறை ரிப்போர்ட்டாம்.

அப்படியே விட்டுவிடலாம்
ஒருவேளை ம.ந.கூட்டணி, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பிரித்தாலும், அது திமுகவுக்குதான் சரிவை ஏற்படுத்தும். அதிமுகவுக்கு பாதிப்பில்லை என கருதுகிறாராம் ஜெயலலிதா. எனவே, தேர்தல் பிரசாரத்தில் இவர்களைத் தாக்கி பேசி சரிக்கு சமமான எதிரிபோன்ற தோற்றத்தை உருவாக்கி, அவர்களை வளர்த்து விடாமல் இருப்பதே நல்லது என நினைக்கிறார் ஜெயலலிதா. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications