அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதமாக உயர்வு- ஜெ., அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலின் போது அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களைக் கவரும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் முக்கியமாக, மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 6 மாதத்திலிருந்து 9 மாதமாக அதிகரிக்கப்படும் என்று இரண்டு கட்சிகளும் அறிவித்தன.

அரசுத்துறை மட்டுமல்லாது தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கும் 26 வாரங்கள் அதாவது 6 மாத காலம் பேறுகால விடுப்பு அளிக்கும் மசோதாவை சமீபத்தில் ராஜ்யசபாவில் மத்திய அரசு தாக்கல் செய்தது. பேறு கால விடுமுறையை 1 வருடமாக அதிகரிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
தமிழக சட்டசபையில் இன்று பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு
அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்பவர்களும் அரசு ஊழியர்கள் தான். அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
பெண் ஊழியர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நான் 2011-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன், அரசுப் பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க, 1980-ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தினை 16.5.2011 முதல் 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டேன்.
எங்களது தேர்தல் அறிக்கையில் 'மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதங்களாக உயர்த்தப்படும்' என்ற வாக்குறுதியை நாங்கள் அளித்திருந்தோம். அதனை செயலாக்கும் விதத்தில், அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தையை பேணி பாதுகாக்கும் வகையில் பேறு கால சலுகையாக வழங்கப்படும் 6 மாத கால மகப்பேறு விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications