அடுத்து 'அம்மா மக்கள் சேவை மையங்கள்'!
சென்னை: பிறப்பு, இறப்பு, குடிநீர்க் குழாய் இணைப்பு உள்பட தமிழக அரசின் பல்வேறு சேவைகளைப் பெற 'அம்மா மக்கள் சேவை மையங்கள்' ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்தச் சேவை மையங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் செயல்படும்.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை:
அலுவலர்கள், அலுவல் நிமித்தமாக வெளியிடங்களுக்குச் சென்றுவிடும் நேர்வில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அந்த அலுவலர்களைச் சந்திக்க இயலாமல் போய் விடுகிறது. இதைத் தவிர்க்க வாரத்தில் ஒரு நாள் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும், நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் 'அம்மா' மக்கள் சேவை மையம் நடத்தப்படும்.

வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையன்றும் செயல்படுத்தப்படும் இந்த மையத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் உதவி ஆணையர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆகியோர் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெறுவர்.
அந்த மனுக்களின் மீது ஆய்வு செய்து குறிப்பிட்ட காலவரையறைக்கு ஏற்ப உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து விண்ணப்பங்களையும் கணினியில் பதிவு செய்து, ஒவ்வொரு கோரிக்கை மனுவுக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முறையான பதில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இந்தப் பணி முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அந்தந்தத் துறைத் தலைவர்கள் இணையதளம் மூலம் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இதன்மூலம், அரசின் சேவைகள் மக்களுக்கு கால விரயமின்றி குறைந்த செலவில் சென்றடைவது உறுதி செய்யப்படும்.
என்னென்ன சேவைகள்?
பிறப்பு, இறப்புச் சான்றிதழ், வர்த்தக உரிமம், பாதாள சாக்கடைக் குழாய் இணைப்பு, குடிநீர்க் குழாய் இணைப்பு, தொழில் வரி விதிப்பு, சொத்து வரி கேட்பு, கட்டட அனுமதி, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்குச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசின் சேவைகளுக்கு இந்த மையத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.












Click it and Unblock the Notifications