விளை நிலங்களில் கெயில் எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்துவேன்: ஜெயலலிதா
சென்னை: அதிமுக ஆட்சி தொடர வாக்களியுங்கள், கெயில் திட்டத்தை விவசாயிகள் நிலங்கள் பாதிக்காதவாறு செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தருமபுரியில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 2.30 மணிக்கு பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார் ஜெயலலிதா.
கடுமையான வெயிலில் கருகிய நிலையில் காத்துக்கிடந்த தொண்டர்களைப் பார்த்து பேச்சைத் தொடங்கிய ஜெயலலிதா, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, ஒசூர், தளி, வேப்பனப்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை (தனி) உள்பட 11 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து பேசிய ஜெயலலிதா, அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றார். நலத்திட்டங்களைப் பட்டியலிட்ட ஜெயலலிதா,
கடந்த, 2011 தேர்தலில் நான் அளித்த வாக்குறுதிப்படி, விலையில்லா அரிசி, தாலிக்கு தங்கம், மகப்பேறு நிதியுதவி, விலையில்லா பசு, வெள்ளாடு, பசுமை வீடு, முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாய், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் என்னால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் திட்டம் என இப்போது குறிப்பிடும் திட்டங்கள் எல்லாம் மக்களே எதிர்பார்க்காதது. நான் சொல்வதை மட்டுமல்ல சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றுவேன் என்றார். ஒரு தாய்க்குத்தான் தன் பிள்ளைகளுக்கு என்ன தேவை என்பது தெரியும். வரும் காலங்களிலும் உங்களுக்கு என்ன தேவை என்பது எனக்குத் தெரியும்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் பல சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்சி செயல்படுகிறது. பொருளாதார வளர்ச்சி அனைத்த தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். தினந்தோறும் புதிய புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகளை கடந்து பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது எனது வாழ்வு.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். மதுவிலக்கு தொடர்பாக யார் வேண்டுமானாலும் பேசலாம்; கருணாநிதி மற்றும் தி.மு.க.வினர் பேச அருகதை கிடையாது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்த நிலையில், 1971ல், மதுக்கடைகளை கொண்டு வந்தது கருணாநிதியே. அவர், இன்று பூரண மதுவிலக்கு குறித்து பேசுகிறார் என்று கூறினார்.
கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்ட ஜெயலலிதா, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டம் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்டு தொடக்கி வைக்கப்பட்டது என்றார். இதன் மூலம் 32 லட்சம் மக்கள் பயன்பெற்றுள்ளனர் என்றும் ஜெயலலிதா கூறினார்.
ஒகேனக்கல் திட்டத்தை கருணாநிதி சுயநலத்தடன் செய்படுத்தவில்லை. சட்டசபைக்கு தெரியாமல் ஒகேனக்கல் திட்டத்தை கருணாநிதி ஒத்திவைத்தார். தி.மு.க., ஆட்சி முடிவடையும் நேரத்தில் திட்டம் துவங்கப்பட்டது. நான் ஆட்சி பொறுப்பேற்றவுடன் விரைவாக செயல்படுத்தப்பட்டு திட்டத்தை துவக்கி வைத்தேன்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டம் மூலம் பேரூராட்சி, நகராட்சி ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற்றுள்ளனர்.
திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக கெயில் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கெயில் திட்டத்தை விவசாயிகள் நிலங்கள் பாதிக்காதவாறு செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளிக்கிறேன்.
அதிமுக ஆட்சி தொடருவதற்கு வாய்ப்பளியுங்கள், மத்திய அரசிடம் முறையிட்டு கெயில் எரிவாயு குழாய்களை மாற்றுப்பாதையில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
அதிமுக ஆட்சிக்காலம் ஏழை எளிய மக்களின் வசந்த காலம் என்று கூறிய ஜெயலலிதா, ஆட்சி தொடர வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
விருத்தாசலத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்த மக்கள் ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தனர். அவசர சிகிச்சை அளிக்காத காரணத்தால் 2 பேர் மரணமடைந்தனர். எனவே வெயில் இல்லாத நேரமாக பார்த்து பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.
எனினும் தருமபுரியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கட்டுக்கடங்காத அளவிற்கு கூட்டம் காணப்பட்டது. ஜெயலலிதா பேசி முடித்த உடன் கூட்டத்துக்கு வந்த பெண்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.