சசிகலா நடராஜன் கஸ்டடியில் ஜெ., அண்ணன் மகன் தீபக்?
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இப்போது சசிகலா நடராஜன் ஆதரவாளராக மாறிப்போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவின் முகத்தை அதிமுக தொண்டர்கள் பார்த்து 50 நாட்களுக்கும் மேலாகிவிட்டது.
காய்ச்சல் நீர்சத்து குறைப்பாட்டிற்காக அட்மிட்டானவரை பல்வேறு நோய்கள் தாக்கின. அரசியல் வி.ஐ.பி.க்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் ஜெயலிதாவை சந்திக்க முயற்சித்து அது பலனளிக்காதநிலையில் ஜெயலலிதாவை பார்த்தவர்களைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு கிளம்பினார்கள்.
அண்ணன் மகள் தீபா
ஜெயலலிதாவிற்கு ரத்த சொந்தம் என்கிற வகையில் அவரது அண்ணன் மகள் தீபா, அத்தையைப் பார்க்க பகீரத முயற்சி எடுத்தும் அவருக்கு மருத்துவமனையின் வரவேற்பறையை கடந்து அனுமதிக்கிடைக்கவில்லை. பார்த்தவர்களைப் பார்க்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டது.
அழுத தீபா
அத்தையை பார்க்க முடியவில்லை என்கிற ஏக்கத்திலேயே நொந்துபோய் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறார் தீபா. அத்தையை பார்க்க விடாமல் தடுப்பதாக சசிகலா மீது குற்றம் சாட்டி ஊடகங்களில் பேட்டி கொடுத்தார் தீபா.
அண்ணன் மகனை வளைத்த சசி தரப்பு
இந்தச் சூழலில், தீபாவின் சகோதரர் தீபக்கை தங்களது பிடியில் சசிகலா வைத்திருப்பதாக அதிமுகவின் மேல்மட்டத்தில் தகவல் உலாவுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட சொத்துக்கள் அல்லாமல் வேறுபல சொத்துக்கள் சமீபகாலங்களில் ஜெயலலிதாவுக்கு சேர்ந்துள்ளன.
தீபாவிற்கு பதிலடி
இதற்கிடையே,ஜெயலலிதாவை சந்திக்க முடியாதற்கு சசிகலாதான் காரணம் என பகீரங்கமாகவே தீபா குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவரது அண்ணன் தீபக்கை மன்னார்குடி தரப்பு தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டார்களாம். சசிகலாவுக்கு எதிராக தீபா, மீண்டும் வாய்த்திறந்தால் அவரது அண்ணன் தீபக்கை வைத்து பதிலடித்தருவதற்காகவே அவரை வளைத்து வைத்துள்ளனர் என்றும் அதிமுகவினர் கூறுகின்றனர்.
சசி வளைத்த காரணம்
ஜெயலலிதா பெயரிலுள்ள சொத்துக்களுக்கு ரத்த சொந்தங்கள் உரிமை கோரிடக்கூடாது என்பதால் சில பல காரியங்களுக்காகவும் தீபக்கை தங்கள் பக்கம் வைத்திருக்கிறார்கள் . மேலும், விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதேனும் நடந்துவிட்டால் சொத்துக்கள் விவகாரத்தில் சில முடிவுகளை எடுப்பதற்கு வசதியாகத்தான் அப்பல்லோவிலேயே தீபக் முடக்கப்பட்டிருக்கிறார் என்கின்றனர். ஜெயலலிதாவின் உடல்நலத்தின் உண்மைத்தன்மையை அறிந்துள்ள தீபக்கும் சசிகலா தரப்பின் ஆதரவாளராக மாறிப்போனார் என்றும் அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.