ஜெயலலிதா மரணத்தில் சசிகலா சதி.. ஓபிஎஸ் கபட நாடகம்.. தீபா சொல்ல வருவது என்ன?
ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாடகமாடுகிறார் என்று தீபா தெரிவித்துள்ளார். அப்படியானால் என்ன நடந்தது என்று தீபா பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்த போது அவரது மரணத்தில் தனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூறினார் தீபா. ஆனால், தற்போ ஜெயலலிதா மரணத்தில் ஓபிஎஸ் நாடகமாடுகிறார் என்றால் தீபாவிற்கு தெரிந்த உண்மை வெளியுலகத்திற்கு வர வேண்டும்.
கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் இறந்தார். இதில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் கடுமையான குற்றச்சாட்டுக்களை சசிகலா மீது வைத்தனர்.
இதுகுறித்து தீபா செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜெயலலிதா மரணத்தில் தனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று ஆணித்தரமாக தெரிவித்தார். ஏனென்றால் தனது அண்ணன் தீபக், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த போது மருத்துவமனையில் உடன் இருந்தார் என்ற காரணத்தையும் கூறினார்.
குற்றச்சாட்டு
இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீபா ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டையில் எம்.ஜி.ஆர் - அம்மா, தீபா பேரவை தேர்தல் பணிமனையை திறந்து வைத்து ஜெயலலிதா மரணம் குறித்து பேசியிருக்கிறார்.
கபட நாடகம்
அதில், டிடிவி தினகரனும், மதுசூதனனும் மக்களை ஏமாற்றி வருவதாகவும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கபட நாடகமாடுவதாகவும் தீபா கூறியுள்ளார். இதனால் ஜெயலலிதாவின் மரணத்தில் மேலும் சந்தேகம் எழுந்துள்ளது.
திசை திருப்ப..
ஜெயலலிதா எம்எல்ஏவாக இருந்த தொகுதியில் தேர்தல் நேரத்தில் தீபா ஜெயலலிதா மரணம் குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமே இல்லை என்று சொன்ன தீபா, திடுதிப்பென்று ஓபிஎஸ் நாடகம் ஆடுகிறார் என்று ஆர்.கே. நகர் தொகுதியில் பிரச்சாரத்தின் போது பேசுவது என்பது வாக்காளர்களை ஏமாற்றவே என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உண்மை என்ன?
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம்தான் என்ன என்று தமிழக மக்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துள்ள நிலையில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை தீபா விளக்க வேண்டும். அப்போதுதான் இதில் சசிகலா பங்கு என்ன? ஓபிஎஸ்ஸின் பங்கு என்ன? என்பது தெரிய வரும்.