ஜெயலலிதா டிச. 5ல்தான் இறந்தார்... நிச்சயமாக.. சத்தியமாக.. டாக்டர் பாலாஜி உறுதி
ஜெயலலிதா முன்கூட்டியே இறந்துவிட்டதாக வதந்தி பரவியிருந்த நிலையில் ஜெயலலிதா டிசம்பர் மாதம் 5ம் தேதிதான் இறந்தார் என்று அப்பல்லோ டாக்டர் பாலாஜி உறுதியாக கூறினார்.
சென்னை: ஜெயலலிதா செப்டம்பர் 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் மாதம் 5ம் தேதிதான் மரணம் அடைந்தார் என்று உறுதியாக கூறினார் டாக்டர் பாலாஜி.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து பரவியுள்ள வதந்திகளை போக்கும் வகையில் அப்பல்லோ மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவிற்கு மருத்துவம் பார்த்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல், டாக்டர்கள் பாலாஜி, பாபு, சுதா சேஷய்யன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
அப்போது, ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இறந்துவிட்டார் என்று அறிவிப்பதற்கு முன்னே இறந்துவிட்டதாகவும், அதனால் அவரது உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டது என்றும் வதந்திகள் பரவி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த டாக்டர் பாலாஜி, "டிசம்பர் 5ம் தேதிதான் ஜெயலலிதா இறந்தார். முன்னரே இறக்கவில்லை" என்று உறுதியாக பதில் அளித்தார்.