7 மணிக்கு ஆரம்பித்து.... சில நிமிடங்களில் முடிந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
சென்னை: அண்ணா தி.மு.க. சட்டசபை கட்சித் தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதாவை அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர். இதையடுத்து ஆளுநர் ரோசையாவை சந்தித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இதற்கான கடிதத்தைக் கொடுக்க உள்ளனர். இதன் பின் தமிழக முதல்வராக ஜெயலலிதா நாளை பிற்பகல் பதவியேற்க உள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்பதற்காக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதன் முதல் கட்டமாக இன்று காலை அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 7 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க.வின் சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு சில நிமிடங்களே இக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முதல்வர் பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் உட்பட 142 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். தே.மு.தி.க.வின் 5 அதிருப்தி எம்.எல்.ஏக்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் சட்டசபை அதிமுக கட்சித் தலைவராக ஜெயலலிதா பெயரை முதல்வர் பன்னீர்செல்வம் முன்மொழிய மூத்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அதனை வழிமொழிந்தார். பின்னர் ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டசபை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் கூட்டம் முடிவடைந்தது. இத்தீர்மானத்துடன் போயஸ் தோட்டம் சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தீர்மானத்தைக் கொடுத்தனர்.

இதன் பின்னர் கடந்த 7 மாதங்களாக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம், ஜெயலலிதா பதவியேற்பு உள்ளிட்டவைகளுக்காக சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications