அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்: ஜெயலலிதா வாக்குறுதி
சென்னை: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தும் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா சற்றுமுன் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூறினார்.
சென்னை தீவுத் திடலில் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். போயஸ் தோட்டத்தில் இருந்து தீவுத் திடலுக்கு கிளம்பிய ஜெயலலிதாவிற்கு வழி நெடுகிலும் காத்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை கேட்பதற்காக பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தீவுத்திடலில் குவிந்துள்ளனர்.
கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது: மதுவிலக்கு குறித்து தீவிரமாக ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வர முடியும் என்பதால் அதுகுறித்து பேசாமல் இருந்தேன். அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார்.
மேலும், மதுவிலக்கை ஒரே கையெழுத்தில், ஒரே நாளில் கொண்டு வந்துவிட முடியாது. மதுக்கடைகள் திறக்கும் நேரம், மூடும் நேரம் குறைக்கப்படும். சில்லறை மது விற்பனைக் கடைகள் நேரம் குறைக்கப்படும். பார்கள் மூடப்படும், மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அடைவோம். மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.