தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையில்லை... மாஃபா பாண்டியராஜன்
தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்று கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, தமிழகத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தகவல்கள் பரவியதை அடுத்து கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று திங்கட்கிழமை வழக்கம் போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து காரணமாக சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 2 மாதங்களுக்கும் மேலாக அவருக்கு நுரையீரல் தொற்று தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் பூரண குணம் அடைந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும், அதிமுக செய்தித் தொடர்பாளர்களும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ஞாயிறு மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தொடர்ந்து சிகிக்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளது. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை அதிமுக தொண்டர்களிடமும் அரசியல் வட்டாரத்திலும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள், பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் பலத்த பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என்று தகவல்கள் பரவத் தொடங்கின. இதனை தமிழக கல்வித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் மறுத்துள்ளார். மேலும் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications