சென்னை ஓமந்தூரார் தோட்ட மருத்துவ கல்லூரி... கோட்டையில் இருந்தபடி திறந்து வைத்தார் ஜெ.
சென்னை: சென்னை ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டது.
இந்த மருத்துவமனையின் மற்றொரு பகுதியில் ரூ.212 கோடி செலவில் புதிய மருத்துவ கல்லூரி கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 7 மாடிகளை கொண்ட 7 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றில் முதல் கட்டமாக, 3 கட்டிடங்களில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நிர்வாகப் பிரிவுகள் ஆகியவை செயல்பட உள்ளன.
இந்த புதிய மருத்துவ கல்லூரிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கியதைத் தொடர்ந்து, தமிழக அரசு மாணவர் சேர்க்கைக்காக 100 இடங்களை நிர்ணயம் செய்தது. நடப்பு ஆண்டிலேயே இந்த மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இந்தப் புதிய மருத்துவ கல்லூரியை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
புதிதாக செயல்படத் தொடங்கியுள்ள இந்த மருத்துவ கல்லூரி, தமிழகத்தின் 20-வது அரசு மருத்துவ கல்லூரி ஆகும். இதன் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்றே தொடங்கப் பட உள்ளன.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவ கல்லூரிகளில், முழுவதும் குளு, குளு வசதி செய்யப்பட்ட முதல் கல்லூரி என்ற பெருமையை இந்த புதிய மருத்துவ கல்லூரி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.