ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளம் உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நியாய விலைக் கடை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணியினை கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள கூட்டுறவு அமைப்புகள் மூலம் செயல்படும் 32,219 நியாய விலைக் கடைகள் மேற்கொண்டு வருகின்றன.

Jayalalithaa increases the pay of ration shop workers

இந்த நியாய விலைக் கடைகளில் தற்போது 21,779 விற்பனையாளர்களும், 3,856 கட்டுநர்களும் பணிபுரிந்து வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப இப்பணியாளர்களின் சம்பள விகிதம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதால், ஊதிய உயர்வுக் குழு ஒன்றினை அமைத்து நான் உத்தரவிட்டேன்.

இந்த ஊதிய உயர்வுக் குழு அளித்த அறிக்கை அரசால் பரிசீலிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடை பணியாளர்களின் ஊதியம் மற்றும் சம்பள விகிதங்களை உயர்த்தி வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

நியாய விலைக் கடை விற்பனையாளர்களுக்கு தற்போது ஓராண்டு வரை 4 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம், ஓராண்டுக்குப் பின்னர் ரூ.3,300 - 8 ஆயிரம் என்ற ஊதிய விகிதத்தில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. நியாய விலைக்கடை கட்டுநர்களுக்கு தற்போது ஓராண்டு வரை 3,500 ரூபாய் தொகுப்பூதியம், ஓராண்டுக்குப் பின்னர் ரூ.3 ஆயிரம் - 7 ஆயிரம் என்ற ஊதிய விகிதத்தில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

நியாய விலைக் கடை விற்பனையாளர்களுக்கு ஓராண்டு பணிக்காலம் வரை வழங்கப்படும் தொகுப்பூதியம் 5 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். ஓராண்டு பணிக்குப் பின் வழங்கப்படும் ஊதிய விகிதம் ரூ.4,300 - 12 ஆயிரம் என்று உயர்த்தி வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.

இதேபோன்று நியாய விலைக்கடை கட்டுநர்களுக்கு ஓராண்டு பணிக்காலம் வரை வழங்கப்படும் தொகுப்பூதியம் 4,250 ரூபாய் என உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளேன்.

ஓராண்டு பணிக்குப் பின் வழங்கப்படும் ஊதிய விகிதம் ரூ.3,900 - 11 ஆயிரம் என்று உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்தப் புதிய தொகுப்பூதியம் மற்றும் ஊதிய விகிதங்கள் உடனடியாக அமல்படுத்தப்படும்.

தற்போது ஊதிய விகிதத்தில் பணிபுரிபவர்களின் சம்பளம் புதிய ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்யப்படும். அவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் அடிப்படை ஊதியத்தின் மீது 63 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி விகிதத்தின்படி அகவிலைப்படி அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும்.

இது தவிர, 15 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கு தேர்வு நிலையில் ஓர் ஊதிய உயர்வு (அடிப்படை ஊதியத்தில் 2.5 சதவீதம்) அளித்து ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.

அடிப்படை ஊதியத்தில் ஆண்டுதோறும் 2.5 சதவீதம் ஊதிய உயர்வு பணியாளர்களின் தற்போதைய ஊதிய உயர்வு நாளிலேயே வழங்கப்படும். ஊதிய விகிதங்களில் அதிகபட்ச நிலை அடைந்தவர்களுக்கு இரு வருடங்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என தேக்கநிலை ஊதிய உயர்வு வழங்கப்படும்.

அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் வீட்டு வாடகைப் படி வழங்கப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதமும் இதர மாநகராட்சிகளில் பணிபுரிபவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 4 சதவீதமும் நகர ஈட்டுப்படியாக வழங்கப்படும்.

சென்னை மற்றும் இதர மாநகராட்சிகளில் பணிபுரிபவர்களில் விற்பனையாளருக்கு ரூ.1,000-ம் கட்டுநருக்கு ரூ.500-ம் நியாய விலைக்கடைப் படியாகவும், இதர இடங்களில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு ரூ.750-ம் கட்டுநருக்கு ரூ.375-ம் நியாய விலைக் கடைப்படியாக வழங்கப்படும்.

விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு மாதந்தோறும் மருத்துவப்படி ரூ.100 வழங்கப்படும். அரசால் மலைவாழ் பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம், அதிகபட்சமாக 900 ரூபாய் மலைவாழ் படியாக வழங்கப்படும். கடல் மட்டத்தில் இருந்து 1,000 மீட்டருக்கு மேல் உள்ள இடங்களில் பணிபுரிபவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம், அதிகபட்சம் 250 ரூபாய் குளிர்காலப்படி வழங்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல், மாற்றுத் திறனாளிப்படி வழங்கப்படும். தற்போது நடைமுறையில் இருந்து வரும் பணியாளர் வைப்பு நிதி பிடித்தம் செய்ய அனுமதிக்கப்படும். இந்தப் புதிய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்படுவதால் நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் அவர்கள் தற்போது பெற்று வரும் மொத்த ஊதியத்தில் 12.14 முதல் 14.87 சதவீதம் வரை கூடுதலாகப் பெறுவார்கள்.

பணிக் காலத்திற்கேற்ப, விற்பனையாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.997 முதல் ரூ.2,048 வரையிலும், கட்டுநர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.978 முதல் ரூ.1,873 வரையிலும் கூடுதலாக பெறுவார்கள். இந்த ஊதிய உயர்வினால் ஆண்டு ஒன்றிற்கு 51.65 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+