உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட செப்.16 முதல் விண்ணப்பிக்கலாம்: அதிமுகவினருக்கு ஜெ., அறிவிப்பு
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் செப்டம்பர் 16 முதல் விண்ணப்பி்க்கலாம். செப்டம்பர் 22ம் தேதி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியைப் போலவே, உள்ளாட்சி தேர்தலிலும் பெற வேண்டும்' என, நிர்வாகிகளுக்கு, அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம், அக்டோபர் 24ல் முடிகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலை முடிக்க, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இதனால், எந்த நேரமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
புகார்களுக்கு ஆளான கவுன்சிலர்களுக்கு, இம்முறை சீட் வழங்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியைப் போலவே, உள்ளாட்சி தேர்தலிலும் பெற வேண்டும் என, தலைமை விரும்புகிறது. எனவே, இளைஞர்கள், பெண்கள், புதுமுகங்களுக்கு இந்த முறை அதிக வாய்ப்பு அளிக்கப்படும்.
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
செப்டம்பர் 16ம் தேதி காலை 8.30 மணி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். வரும் 22ம் தேதி மாலை 8 மணி வரை உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்யலாம். சென்னை மாநகராட்சிக்கான விண்ணப்பங்கள் கட்சி தலைமையகத்தில் வழங்கப்படும். மற்ற மாவட்டங்களில் மாவட்ட தலைமை கழகத்தில் விநியோகம் செய்யப்படும் எனக்கூறியுள்ளார்.
மாநகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.11 ஆயிரம்
நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம்:ரூ.5 000
பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம்:ரூ.2000
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.11 ஆயிரம்.
16ம் தேதி பவுர்ணமி தினமாகும். ஆவணி மாதத்தின் கடைசி நாளான அன்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி முதல் புரட்டாசி மாதம் பிறக்க உள்ளது அதோடு தேய்பிறையும் தொடங்குகிறது. எனவேதான் ஜெயலலிதா ஏகாதசி தினமான இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.