சென்னை மெட்ரோ ரயில் திட்ட வெற்றிக்கு ஜெ. தான் காரணம்: ஓ.பி.எஸ்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் வெற்றி பெற தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் காரணம் என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலந்தூரில் அதிமுக சார்பில் மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கியதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிறுவனத்தைத் தேர்வு செய்தது, அதற்காக பெரும்பகுதி நிதி ஒதுக்கீடு செய்தது, அத்திட்டம் குறித்து தினமும் ஆய்வு மேற்கொண்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது முதலமைச்சர் ஜெயலலிதான்" என்றார்.
மேலும், மெட்ரோ ரயில் பணிகள் முழுவதும் வரும் 2016ம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், தங்கமணி, சின்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.