57 மீனவர்கள், 98 படகுகளை விடுவிக்க வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை தேவை: மோடிக்கு ஜெ., கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற 57 தமிழக மீனவர்கள் மற்றும் 98 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்கும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் மீன்பிடி சாதனங்கள் மற்றும் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதுதொடர்பாக ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 4-ம் தேதியும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் கடந்த 5-ம் தேதியும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுபற்றி முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கை கடற்படையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 23 மீனவர்கள் உள்பட, அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ள 57 மீனவர்களையும், 98 படகுகளையும் விடுவிக்க வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கும்படி அந்த கடிதத்தில் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.