29 மீனவர்கள், 94 படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 29 தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 94 படகுகளையும் விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த 21-ம் தேதி (ஜூன் 21-ம் தேதி) நாகப்பட்டினம் மீனவர்கள் 5 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
படகு எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்களது படகு வல்வெட்டித்துறை பகுதியில் கரை ஒதுங்கியது. இயந்திரக் கோளாறு காரணமாகவே அவர்கள் அங்கு வந்தனர் என்று பாராமல்கூட இலங்கைக் கடற்படையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
ஏற்கெனவே தமிழக மீனவர்கள் 24 பேர் இலங்கைச் சிறைகளில் அடைப்பட்டுள்ளனர். தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள நாகை மீனவர்களையும் சேர்த்து 29 தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் வாடுகின்றனர்.
பல்வேறு கட்டங்களில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 94 படகுகளும் சேதமடையும் நிலையில் இலங்கையில் உள்ளது. எனவே, 29 தமிழக மீனவர்களையும் 94 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வெளியுறவு அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.