வீடியோ கான்பரன்சிங் மூலம் ரூ.111 கோடி மதிப்பிலான கட்டிங்களை திறந்து வைத்த ஜெ.
சென்னை: தமிழகத்தில் ரூ.111 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகக் கட்டிடம் ரூ.30 கோடியே 46 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. 3 தளங்கள், 219 அறைகள், 4 கூட்ட அரங்குகள் கொண்ட அந்த கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

இது தவிர கடலூரில் ரூ.24 கோடியே 41 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகக் கட்டிடம், தூத்துக்குடியில் ரூ. 42 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு, தாம்பரத்தில் ரூ. 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீரங்கத்தில் ரூ. 2 கோடியே 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு,
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ. 31 கோடியே 73 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 15 வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள், அந்தியூர் மற்றும் சின்னசேலத்தில் ரூ. 4 கோடியே 25 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளையும் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும் ரூ. 92 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 7 குடியிருப்புகளுடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலகக் கட்டிடங்கள், ரூ. 4 கோடியே 60 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 65 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பதிவறை கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார்.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறையின் குறுவட்ட அளவர்களுக்கு ரூ. 10 கோடியே 16 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 80 குடியிருப்புகளுடன் கூடிய அலுவலகக் கட்டிடங்கள் உள்பட பல்வேறு கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications