நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட்... ஜெ. பாராட்டு
சென்னை: இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டியுள்ளார்.
மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. அதனை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். அதில் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய பட்ஜெட்டை வரவேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பொருளாதார சீரமைப்பு...
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க வகை செய்யும் அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. அடுத்த 2, 3 வருடங்களுக்கு வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. மேலும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க இதில் தெளிவான திட்டமும் உள்ளது.
நவீன சிறுநகரங்கள்....
தமிழகத்தில் ஜவுளி மண்டலம் அமைக்கும் முடிவையும், சேவை வரி, சரக்கு வரியை அமல்படுத்தும் முன் மாநில அரசுகளின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்ததையும் வரவேற்கிறேன். பொன்னேரி உள்பட 100 நவீன சிறு நகரங்கள் அமைக்க முடிவு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது.
கோரிக்கை...
பட்ஜெட்டில் அறிவித்த பிரெய்லி அச்சகங்களில் ஒன்றாவது தமிழகத்தில் அமைய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் வேளாண் பணிகளை சேர்க்கவேண்டும் என்ற எனது பரிந்துரை ஏற்கப்பட்டது மகிழ்ச்சி. எனினும் வாய்ப்பு இல்லாத இடங்களில் இந்த திட்டத்தை விவசாயத்துடன் இணைப்பதை கட்டாயம் ஆக்கக் கூடாது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
மகிழ்ச்சி...
நதிகள் இணைப்பு குறித்து பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுதொடர்பான விரிவான ஆய்வுப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.