குழம்பிக் கிடக்குது அதிமுக.. போட்டுத் தாக்கும் குஷ்பு!
கன்னியாகுமரி: அதிமுகவினர் தேர்தல் அறிக்கை கூட தயாரிக்க முடியாத அளவிற்கு குழப்பத்தில் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். எந்த வித இலவச அறிவிப்பும் இல்லாத தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட தயாரா என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜயரணியை ஆதரித்து, குழித்துறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் இப்பிரசாரம் நடைபெற்றது.
ஆனால், உரிய அனுமதியின்றி, குழித்துறை பகுதியில் குஷ்பூ மற்றும் விஜயதரணி பிரசாரத்தில் ஈடுபட்டதாக, தேர்தல் பார்வையாளர்கள் புகார் அளித்தனர். இதன்பேரில், களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தமிழகம் முழுவதும் சென்று தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறேன். தமிழக மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர். இந்த கூட்டணியை வெற்றி பெறச்செய்ய மக்கள் முடிவு செய்துவிட்டனர். அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கூறினார்.

குழப்பத்தில் அதிமுக
திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மக்கள் நலத்திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் அ.தி.மு.க. இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. அவர்களால் தேர்தல் அறிக்கையைகூட தயாரிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு குழம்பி போய் உள்ளனர்.

தமிழகம் முன்னேறவில்லை
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்களுக்கு முக்கியத்துவம் இல்லை. ஆனால் விவசாய கடன் தள்ளுபடி, மது விலக்கு போன்றவற்றுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தொழில்வளம் பாதிப்பு
தமிழகத்தில் 7 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை இல்லை. தமிழகத்தில் தொழில்வளம் இல்லாதது தான் இதற்கு காரணம். மின் உற்பத்தி சரியாக இல்லாததால் தொழில்வளம் பெருகவில்லை.

மக்கள் விரும்புறாங்க
ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த முறை மக்களை ஏமாற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது. மாற்றத்தை மக்கள் விரும்புவதால் அதிமுகவிற்கு மாற்றாக திமுக காங்கிரஸ் கூட்டணியை மக்கள் விரும்புகிறார்கள்.

பயம் எதற்கு?
தேர்தல் ஆணையம் தமிழகத்தில் அதிகாரிகளை மாற்றி உள்ளது. இதனால் அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. தோல்வி பயம் காரணமாக தான் அதிகாரிகளை மாற்றக்கூடாது என தேர்தல் கமிஷனரிடம் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். மடியில் கணம் இல்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும் என்றும் கேட்டார் குஷ்பு.

குஷ்பு சவால்
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதாக கூறும் ஜெயலலிதா மிடாஸ் நிறுவனத்தை மூடுவாரா? இலவசங்கள் இல்லாத தேர்தல் அறிக்கையை வெளியிடுவாரா என்றும் குஷ்பு சவால் விடுத்துள்ளார்.

போலீஸ் வழக்கு
இதனிடையே விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜயரணியை ஆதரித்து, குழித்துறை பகுதியில் குஷ்பூ மற்றும் விஜயதரணி பிரசாரத்தில் ஈடுபட்டதாக, தேர்தல் பார்வையாளர்கள் புகார் அளித்தனர். இதன்பேரில், களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications