ஜெ.வுக்காக உயிரிழந்த அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: மகளின் கல்விச் செலவு ஏற்பு
சென்னை: விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட அதிமுக பிரமுகர் ராஜயோக்கியத்தின் குடும்பத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா ரூ.3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார். உயிருக்கு போராடும் அவரது மனைவிக்கு ரூ. 50ஆயிரமும், அவரது மகளின் கல்விச் செலவினை அதிமுகவே ஏற்றுக்கொள்ளும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
என் மீது கொண்ட பேரன்பின் காரணமாக, தற்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைத் தலைவரும், வடபுதுபட்டி கூட்டுறவு வேளாண்மை வங்கியின் தலைவருமான ராஜயோக்கியம் விஷம் அருந்தியதன் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும்; தனது கணவர் ராஜயோக்கியம் விஷம் உட்கொண்ட தகவலை அறிந்த அவருடைய மனைவி முத்துலட்சுமியும் விஷம் உட்கொண்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி கேட்டும் நான் மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.
என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. இத்தகைய செயல்கள் எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகின்றன. அன்புகூர்ந்து இது போன்று இனி யாரும் செய்ய வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
அன்புச் சகோதரர் ராஜயோக்கியமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 3,00,000 ரூபாய் வழங்கப்படும்.
அதே போல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முத்துலட்சுமி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரது மருத்துவ சிகிச்சைக்காக 50,000 ரூபாய் வழங்கப்படும். மேலும், மறைந்த கழக உடன்பிறப்பு ராஜயோக்கியமுடைய 9 வயது மகள் திவ்யாவின் கல்வி உள்ளிட்ட தேவையான அனைத்து உதவிகளையும் ‘அ.தி.மு.க.' செய்து தரும் என்பதையும் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications