ஜெ., சசியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அழுத்தம் கொடுத்த மத்திய அரசு... ஆக்சனில் இறங்கிய முதல்வர்
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டத்தின்படி, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு துரித கதியில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, வழக்கில் சம்பந்தப்பட்ட 128 சொத்துக்களில், 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். பின் குன்ஹாவின் தீர்ப்பு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியால் ரத்து செய்யப்பட, ஆனால் கர்நாடக அரசின் மேல் முறையீட்டின் பேரில் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பையே உறுதிப்படுத்தியது உச்ச நீதிமன்றம்.
ஜெயலலிதா மரணமடைந்து விட்டார். ஆனால் அவருடன் இணைந்து கூட்டுச்சதி செய்த சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இப்போது பெங்களூரு சிறையில் இருக்கிறார்கள்.
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் வழக்கின் விசாரணை அமைப்பானது சம்பந்தப்பட்ட சொத்துகளின் நிலைமையை கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதாவது பறிமுதல் செய்யப்பட வேண்டிய சொத்துகள் யாருக்கும் கை மாற்றப்படாமல் அரசின் வசம் வைத்திருக்க வேண்டும் என்பதை தமிழக ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்ககம் கண்காணிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு அழுத்தம்
சொத்து பறிமுதல் விசயத்தில் முதலில் முதலில் எடப்பாடி பழனிச்சாமி ஆர்வம் காட்டவில்லையாம். மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு துரித கதியில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
68 சொத்துக்கள்
இந்நிலையில்,ஓரிரு நாட்களுக்கு முன் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி உள்ளிட்ட ஆறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்ககத்தில் இருந்து ஒரு உத்தரவு போயிருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது பெயர்களில் ஆறு நிறுவனங்களுடையதாக காட்டப்பட்டிருக்கும் 68 சொத்துக்களை அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர்களுக்கு உத்தரவு
இதன்படி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் இந்த சொத்துக்களை இடம் கண்டு, அந்த இடங்களில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த சொத்துகள் தமிழக அரசுக்குச் சொந்தமானது என்று அறிவிக்கப்படுகிறது என வருவாய் துறை அதிகாரிகள் மூலம் அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பந்தப்பட்ட இந்த சொத்துக்களின் மீது எவ்வித பரிமாற்றங்கள் நடக்க முயன்றாலும் அதை நிராகரிக்க வேண்டும் என்று பத்திரப் பதிவுத் துறைக்கும் தமிழக அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுக அரசு
அம்மாவின் அரசு என்று மூச்சுக்கு மூச்சு கூறி வரும் அமைச்சர்கள், அதிகாரிகள்தான் இன்றைக்கு அதே அம்மாவின் சொத்துக்களையும், அவருடன் இருந்த சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்களையும் பறிமுதல் செய்யப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போயஸ் கார்டனை நினைவுச் சின்னமாக்குவோம் என்று கூறி வரும் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதாவின் சொத்துக்களை கனத்த இதயத்தோடு பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொண்டர்கள் கவலை
ஜெயலலிதாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேறு யாராவது உத்தரவிட்டிருந்தால் போராட்டம் நடத்தலாம். ஆனால் அதிமுக அரசே உத்தரவிட்டுள்ளதால் அதிமுக தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்