அப்போலோவில் பதற்றம்… ஊழியர்கள் பின்பற்ற வேண்டியது என்னென்ன.. நிர்வாகம் வாய்மொழி உத்தரவு
அப்போலோ மருத்துவமனையில் அசாதாரண சூழல் நிலவிவருவதால், அப்போலோ நிர்வாகம் அதன் ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை மிக மோசமாக உள்ளது என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால் அப்போலோ மருத்துவமனையில் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழலில் எப்படி செயல்பட வேண்டும் என்றும் அப்போலோ நிர்வாகம் அதன் ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவுகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக முதல்வர் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போதே மற்ற நோயாளிகளும் மருத்துவமனைக்கு வந்து செல்வதற்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் மற்ற நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அப்போலோ மருத்துவமனை முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், அப்போலோ மருத்துவமனைக்கு வெளியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் மற்ற நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அப்போலோ மருத்துவமனைக்குள் வந்து சிகிச்சைப் பெற்றுக் கொள்ள முடியாத நோயாளிகளை, சென்னையில் இதர இடங்களில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வரவழைத்து சிகிச்சை அளிக்கும் படி அதன் ஊழியர்களுக்கு அப்போலோ நிர்வாகம் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.