அப்பல்லோவில் 31வது நாள்... ஜெயலலிதாவிற்கு தொடரும் சிகிச்சை
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 31வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. 31வது நாளாக சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து இதுவரை அப்பல்லோ 11 அறிக்கைகளை வெளியிட்டு விட்டது.
கடந்த 22ம் தேதி நள்ளிரவில் இருந்து இதுநாள் வரை அப்பல்லோ மருத்துவமனை வாசலில் தினசரியும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முதல்வரின் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.
காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறப்பட்ட அறிக்கை மெல்ல மெல்ல மாறியது. நுரையீரல் நோய் தொற்றுக்கு சிகிச்சை என்று கூறப்பட்டது. செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஆலோசனையின் பேரில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அறிக்கை வெளியானது. தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் சென்னைக்கு வந்து ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள நிபுணர்களும் தற்போது பிசியோ தெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நலம்பெற வாழ்த்து
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே பிரதமர் மோடி தொடங்கி ஆளுநர் வித்யாசாகர் ராவ், திமுக தலைவர் கருணாநிதி, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் விரைவில் நலமடைய வாழ்த்து கூறினர்.
பரவிய வதந்தி
முதல்வர் உடல்நிலை குறித்து வதந்திகள் காட்டுத் தீ போல பரவியது. எதிர்கட்சியினர், முதல்வர் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதிமுக தொண்டர்கள் கவலையடைந்தனர். முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாக கூறப்பட்டாலும் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று கூறப்பட்டதை அடுத்து தற்காலிக முதல்வர் கோரிக்கை எழுந்தது.
ஆளுநரின் வகையும் விசாரணையும்
அக்டோபர் 1ம் தேதியன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவர் முதல்வரை நேரில் பார்க்கவில்லை. மருத்துவர்களை ஆலோசித்ததாக அறிக்கை வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், விசிக தலைவர் தொல். திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், பண்ருட்டி வேல்முருகன், சரத்குமார் உள்ளிட்ட பல அரசியல் கட்சித்தலைவர்கள் அப்பல்லோவிற்கு வந்தனர்.
ராகுல்காந்தி வருகை
ஜெயலலிதா நீண்ட நாட்கள் அப்பல்லோவில் தங்க வேண்டும் என்று அக்டோபர் 6ம் தேதி அறிக்கை வெளியானது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 7ம் தேதி காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி அப்பல்லோவிற்கு வந்து ஜெயலலிதா சிகிச்சை பெறுவது பற்றி மருத்துவர்களிடம் நலம் விசாரித்து சென்றார்.
ஸ்டாலின், ராசாத்தி அம்மாள் வருகை
ஜெயலலிதாவைக் காண ராகுல்காந்தி வருகை தந்தது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அன்னையின் ஆதரவை தெரிவிக்க வந்ததாக கூறினார் ராகுல் காந்தி. அக்டோபர் 8ம் தேதி அப்பல்லோவிற்கு சென்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவருடன், துரைமுருகன். பொன்முடி சென்று நலம் விசாரித்தனர்.
மத்திய அமைச்சர்கள் வருகை
அக்டோபர் 9ம் தேதி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அவரைத் தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர் அக்டோபர் 12ம் தேதியன்று சென்னைக்கு வந்து நலம் விசாரித்து சென்றனர். விரைவில் நலமடைய பிரார்த்தனை செய்வதாக வாழ்த்து கூறினர்.
பன்னீர் செல்வம் வசம் பொறுப்புகள்
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விளக்கமான அறிக்கை கேட்டும், பொறுப்பு முதல்வர் நியமிக்க கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அக்டோபர் 11ம் தேதி முதல்வர் ஜெயலலிதா வசமிருந்த பொறுப்புகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டது. இலாகா இல்லாத முதல்வரானார் ஜெயலலிதா.
நேரில் பார்க்காத தலைவர்கள்
முதல்வர் ஜெயலலிதாவை சசிகலாவும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் மட்டுமே நேரில் பார்த்திருக்கிறார்கள். ஆளுநர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் என அப்பல்லோவுக்கு சென்ற யாருமே இதுவரை முதல்வர் இருந்த வார்டு பக்கம் கூட போகவில்லை. ஆனால் அவரது உடல் நலம் குறித்து விசாரித்ததாக கூறிச் சென்றனர்.
ஆலயமாக மாறிய அப்பல்லோ
அப்பல்லோ மருத்துவமனை வாசலில் அதிமுக தொண்டர்களும், மகளிர் அணியினரும் தினசரியும் பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர். தேங்காய்கள், பூசணிக்காய்கள் உடைப்பதால் அப்பல்லோ வாசல் ஆலயமாக மாறி வருகிறது. உருள்வலமும், அக்னிசட்டி எடுப்பதும், அன்னதானம் வழங்குவதுமாக தொண்டர்கள் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.
தொடரும் அறிக்கைகள்
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கடந்த 10ம் தேதி இரவு ஒரு அறிக்கை வெளியானது. அதன்பிறகு அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் 21ம் தேதியன்று இரவு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் முதல்வருக்கு தொடரும் சிகிச்சைகள் பற்றி தெளிவாக விளக்கப்பட்டிருந்தது.
ஜெ., பேசுகிறார்
ஜெயலலிதாவிற்கு செயற்கை சுவாசம் தொடருவதாகவும், அவர் மருத்துவர்களுடன் பேசுவதாகவும் கடைசியாக வெளியான அறிக்கை தெரிவித்தது. இதனையடுத்தே ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். முதல்வர் உடல் குணமடைந்து வருவதாகவும் அறிக்கை வெளியிட்டார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
31வது நாளாக சிகிச்சை
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 31வது நாளாகிவிட்டது. தீபாவளிக்கு முன்பாக டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் ஜெயலலிதா என்று அதிமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. ஆனாலும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை இதுவரை அதுகுறித்த தகவலை வெளியிடவில்லை. முதல்வர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாகும்.