போயஸ் கார்டன் பங்களாவுக்குள் நுழையும் 'டெல்லி'.... தடுக்க சசி கோஷ்டி ஏவும் ஜெ. 'ஆவி'
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா பங்களாவில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தக் கூடும் என கூறப்படுகிறது. இதைத் தடுக்கவே சசிகலா கோஷ்டி ஆவி கதையை பரப்புவதாக கூறப்படுகிறது.
சென்னை: தினகரன் வழக்கை முன்வைத்து போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவுக்குள் வருமான வரி மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தலாம் என கூறப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் ஜெயலலிதாவின் ஆவி நடமாடுவதாக ஒரு தகவலை சசிகலா கோஷ்டி பரப்பிவிடுகிறது.
ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு இன்னமும் விடைகிடைக்கவில்லை. அதேநேரத்தில் ஜெயலலிதாவின் ஆவியை முன்வைத்து நாள்தோறும் பல ஆரூடங்கள் ரெக்கை கட்டி பறந்து கொண்டே இருக்கின்றன.
ஜெயலலிதாவின் சமாதிக்கு போய் தியானம் செய்தவர்கள் எல்லோருக்கும் சிக்கலாகிவிடுகிறது என்கிற தகவல் தீயாக பரவியது. ஜெயலலிதாவின் ஆவி உக்கிரமாக இருப்பதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என பரப்பிவிடப்பட்டது.
கைவிடப்பட்ட சமாதி
இதையடுத்து ஜெயலலிதா சமாதி கைவிடப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது. இதேபோல் போயஸ் கார்டன் பங்களாவில் ஜெயலலிதா ஆவி என்கிற ஒரு கதை உலவுகிறது.
ஓட ஓட துரத்தும் ஆவி
ஜெயலலிதா யாரையெல்லாம் துரோகியாக கருதினாரோ அவர்கள் போயஸ் பங்களாவுக்குள் நுழைந்தாலே அந்த ஆவி ஓட ஓட விரட்டுதாம். கொடநாடு மர்ம கொலைகளுக்கும் கூட அந்த ஆவியின் திருவிளையாடலே காரணம் எனவும் கூறப்படுகிறது.
உக்கிர ஓலம்
அதுவும் மாலை ஆகிவிட்டாலே ஜெயலலிதா ஆவியின் ஓலம் உக்கிரமாகிறதாம். அது விடிய விடிய அலறிக் கொண்டே இருக்கிறதாம்.
விவேக் தயக்கம்
இதனால்தான் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் குடியேற விவேக் ரொம்பவே யோசிக்கிறாராம். அதேநேரத்தில் ஜெயலலிதாவின் ஆவி நடமாடுகிறது என்பதெல்லாமே சசிகலா கோஷ்டியால் திட்டமிட்டே பரப்பப்படுகிற வதந்தி எனவும் கூறப்படுகிறது.
கட்டுக்கதை?
தினகரன் மீதான வழக்கு மற்றும் ஜாஸ் சினிமாஸை முன்வைத்து விவேக்குக்கான வலை ஆகியவற்றின் மூலம் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நுழையக் கூடும் என கூறப்படுகிறது. அப்படி அதிகாரிகள் நுழையாமல் இருப்பதைத் தடுக்கத்தான் இந்த ஆவி கதை என்கிறது அதிமுக வட்டாரங்கள்.