அதிகாரி தற்கொலை விவகாரம்: தமிழக வேளாண் அமைச்சர் பதவியில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி டிஸ்மிஸ்!
தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் பதவியில் இருந்து அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இன்று அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். நெல்லை வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலை விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது புகார் எழுந்ததாலேயே அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி திருமால்நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இவர் வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இவர் அண்மையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
வேளாண்துறை ஓட்டுநர் காலி இடங்களுக்கு நேர்மையான முறையில் நியமனங்களை மேற்கொண்டிருந்தார் முத்துக்குமாரசாமி. ஆனால் வேளாண்துறை அமைச்சரின் உதவியாளர்கள் எனக் கூறிக் கொண்ட சிலர், தாங்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கே பணியிடம் வழங்க வேண்டும் அல்லது நீங்கள் பணிவழங்கும் நபர்களிடம் இருந்து பணம்பெற்று தாருங்கள் என்று முத்துக்குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதில் மனமுடைந்துதான் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேளாண்மைத்துறை பணியாளர்கள், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி வகித்து வந்த அண்ணா தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் பதவி 2 நாட்களுக்கு முன்னர் பறிக்கப்பட்டது.
ஆனால் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அமைச்சர் பதவியில் இருந்தே டிஸ்மிஸ் செய்து வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இக்கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் அதிரடியாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ரோசய்யா இன்று இரவு இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி வகித்து வந்த வேளாண்மைத் துறையை அமைச்சர் வைத்தியலிங்கம் கூடுதலாக கவனிப்பார் என்றும் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications