இலங்கை சிறையில் 21 மீனவர்கள், 30 படகுகள்....மீட்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெ. கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் வாடும் 21 தமிழக மீனவர்கள் மற்றும் 30 படகுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அனுப்பிய கடிதம்:
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதையும், தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடிப்பதை தடுக்கப்படுவதையும் உங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

தூத்துக்குடி மாவட்டம் தெரசாபுரத்தில் இருந்து கடந்த 26.9.15 அன்று 7 மீனவர்கள் ஒரு எந்திரப் படகில் மீன் பிடிக்க சென்றனர். 29.9.2015 அன்று அவர்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை பிடித்து சென்று விட்டனர்.
தற்போது அந்த 7 தமிழக மீனவர்களும் இலங்கையில் நெசாம்போ பகுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளனனர். கடந்த ஒரே வாரத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறை பிடித்து செல்லப்படுவது இது மூன்றாவது சம்பவமாகும்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையான இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டுஎனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. என்றாலும் இலங்கை அரசின் செயல்பாடுகளால் கடல் பகுதியில் தொடர்ந்து அதே சூழலே நீடிக்கிறது.
எனவே மத்திய அரசு தூதரகம் மூலம் உறுதியான நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் நலனையும், உரிமையையும் காக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். பல முறை இதுபற்றி கூறியுள்ள போதிலும் இலங்கை அரசு, தொடர்ந்து, தமிழக மீனவர்களை சிறை பிடித்து செல்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழக மீனவர்களை விடுவிக்கும் இலங்கை அரசு, அவர்களது படகுகளை திருப்பி ஒப்படைப்பதில்லை. இலங்கையின் இந்த திட்டத்தால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.தற்போது இலங்கை வசம், தமிழக மீனவர்களின் 30 மீன்பிடி படகுகள் உள்ளன.
பருவ மழை காரணமாக அந்த படகுகள் பழுதடைந்து சேதமாகும் நிலையில் உள்ளன. இலங்கை அரசுடன் 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி சர்வதேச கடல் எல்லையை இந்தியா ஏற்கக் கூடாது. இதை வலியுறுத்தி நான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். தமிழக அரசும் தன்னை அதில் இணைத்துக் கொண்டுள்ளது.
எனவே தாங்கள் இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் சுதந்திரமாகவும், அமைதியாகவும் மீன்பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் இலங்கை சிறைகளில் உள்ள 7 மீனவர்களுடன் சேர்த்து ஏற்கனவே சிறை பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்களையும் மீட்க உடனே நடவடிக்கை எடுக்க தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று மீண்டும் ஒரு தடவை உங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications