ஆப்கானில் தமிழக பாதிரியார் கடத்தல்- பிரதமர் தலையிட கோரி முதல்வர் ஜெ. கடிதம்
சென்னை: ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளாள் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமாரை பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அகதிகளின் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்ஸிஸ். கடந்த சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி முனையில் தலிபான் தீவிரவாதிகள் அவரை கடத்திச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அலெக்ஸிஸ் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த கடத்தலில் தொடர்பிருக்கலாம் என்ற அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை நேற்று அந்நாட்டு பாதுகாப்புப் படை கைது செய்தது.
இந்த நிலையில் பாதிரியார் அலெக்ஸிஸ் கடத்தப்பட்டிருப்பதால் அவரது உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். அவரை பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வரின் கடிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடித விவரம்:
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நிவாரணப் பணியாளர் அலெக்ஸ் பிரேம் குமார் ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என அச்சம் எழுந்துள்ளது.
எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, கடத்தப்பட்ட பாதிரியாரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பாதிரியாரை பாதுகாப்பாக மீட்க விரைந்து செயல்படுவார்கள்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.