தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக பதவியேற்ற ஜெயலலிதா!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று பதவியேற்றார். இப்பதவியேற்பு விழாவையொட்டி சென்னையில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. ஆனால் இந்த வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா இன்று மீண்டும் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதா இதுவரை கடந்து வந்த பாதை:
- முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்பு அண்ணா தி.மு.க. சார்பில் 1991 முதல் 1996 வரை முதல் முறையாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்தார்.
- 1996 ஆம் ஆண்டு தேர்தலில் அண்ணா திமுக தோல்வி அடைந்தது. தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது.
- அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது ஏராளமான வழக்குகள் ஜெயலலிதா மீது தொடரப்பட்டன.
- 2001 ஆண்டு சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. வெற்றி பெற்றது. 2001 மே முதல் செப்டம்பர் வரை முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்தார்.
- டான்சி நில முறைகேடு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் முதல்வர் பதவியை இழந்தார்.
- 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார்.
- 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் டான்சி வழக்கில் விடுதலை பெற்றதால் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்றார்.
- 2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. தோல்வி அடைந்தது.
- 2011 ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் அண்ணா தி.மு.க. வெற்றி பெற 4வது முறையாக ஜெயலலிதா முதல்வரானார்.
- 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்தது.
- இதனால் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார்.
- 2015ஆம் ஆண்டு மே 11-ந் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.
- சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஜெயலலிதா சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் ரோசையா அழைப்பு விடுத்தார்.
- இந்த அழைப்பின் அடிப்படையில் தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக இன்று காலை 11 மணிக்கு ஜெயலலிதா பதவியேற்றார்.












Click it and Unblock the Notifications