மாநில அரசு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைக்கிறது.. மெட்ரோ விழாவில் ஜெ. திடீர் பாராட்டு!
சென்னை: அதிமுக ஆட்சி மீண்டும் பொறுப்பேற்றவுடன் தமிழகத்திற்கு தேவையான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, இன்று காலையில் தலைமைச் செயலக வளாகத்தில் 197 புதிய அரசு பஸ்களை, கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, 11.30 மணிக்கு, சென்னை விமான நிலையம் - சின்னமலை இடையிலான, மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை, காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். அத்துடன், விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லுார் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையங்களையும் திறந்து வைத்தார்.
மொத்தம், 8.6 கி.மீ துாரமுடைய, விமான நிலையம் - சின்னமலை இடையிலான மெட்ரோ ரயில் பாதையில் பணிகள் முடிந்து, ஒரு மாதமாக சோதனை ஓட்டம் நடந்தது. இன்று ரயில் சேவை தொடங்கியது,
|
முதல் ரயில் பயணம்
முதல் ரயில், பயணிகள், வி.ஐ.பி.,க்கள் யாரும் இன்றி, விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அந்த ரயிலை அம்சவேணி என்ற பெண் ஓட்டுநர் இயக்கினார். அடுத்த ரயிலில், மத்திய அமைச்சர்கள், வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
|
ஜெயலலிதா பேச்சு
முன்னதாக தலைமைசெயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் பங்கேற்ற ஜெயலலிதா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தாம் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழகத்திற்கு தேவையான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மத்திய அரசிடம் இதற்காக தொடர்ந்து பேசி வருவதாகவும், மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

வெங்கய்யா நாயுடு பேச்சு
சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, சென்னையின் இரண்டாவது மெட்ரோ ரயில் வழித்தட துவக்க விழாவில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார். இந்த மெட்ரோ ரயில் சேவையால் சென்னை நகர மக்கள் மிகுந்த பயனடைவர் என்றார். இந்த சேவையை முதல்வர் துவக்கி வைப்பது பெருமைக்குரியது என்ற மத்திய அமைச்சர், மெட்ரோ ரயில் சேவையால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் வெங்கய்யா நாயுடு கூறினார்.

ஒத்துழைப்பு கொடுப்போம்
இந்த வழித்தடம் சென்னை விமான நிலையத்தை இணைக்கும் முக்கியமான வழித்தடம் என்று குறிப்பிட்ட வெங்கய்ய நாயுடு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழுஒத்துழைப்பு வழங்கும் என்றார். தமிழக மக்கள் பயன் பெறும் வகையில் விரைவில் ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறும் என குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications