தமிழகத்தில் எங்கே வரப் போகிறது எய்ம்ஸ் மருத்துவமனை, இடத்தை சொல்லுங்கள்.. மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்ட இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இதுவரை எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்:
2014-15ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், டெல்லியில் இருப்பது போன்று அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டின் மற்ற பகுதிகளிலும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 18.7.2014 அன்று உங்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், ‘‘தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்திருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.
மேலும் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகரம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் தோப்பூர் ஆகிய பகுதிகளில் நிலம் கண்டறியப்பட்டு, அவற்றை ஒதுக்கி தர தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் நான் கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தேன்.
எனது கோரிக்கைக்கு ஏற்ப மத்திய அரசு தனது 2015 -16ம் ஆண்டு பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்தது, அதோடு தமிழ்நாட்டுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம்தேதி முதல் 25ம்தேதி வரை மத்தியக்குழு வந்து இதுதொடர்பாக ஆய்வு செய்தது.
தமிழக அரசு குறிப்பிட்டிருந்த 5 ஊர்களுக்கும் சென்று மத்தியக்குழு ஆய்வு செய்து விட்டுச் சென்றது. என்றாலும் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படும் என்ற முடிவை மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை. சிறப்புமிக்க எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு உரிய மருத்துவ சேவையை தரும். மருத்துவ வசதியையும் மேம்பாடு பெறச் செய்யும்.
எனவே, தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த ஊரில் அமைக்கப்படும் என்ற விபரத்தை மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும். இதன்மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் மேலும் காலதாமதமின்றி தொடங்குவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications