வரலாறு காணாத பேரழிவு.... மூழ்கிய கடலூர் சேதங்களை பார்வையிடுவாரா ஜெ.?
கடலூர்: சுனாமி, தானே புயலை விட மிக மோசமான பேரழிவை சந்தித்துள்ளது கடலூர் மாவட்டம். ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமுமே வெள்ளத்தால் அழிந்து போயுள்ள நிலையில் தற்போதைய பேய்மழை அம்மாவட்டத்தை உலுக்கி எடுத்து வருகிறது. இப்போதாவது முதல்வர் ஜெயலலிதா அழிந்து கொண்டிருக்கும் கடலூர் மாவட்ட வெள்ளசேதங்களை பார்வையிட வருவாரா? என்பதுதான் அந்த மக்களின் எதிர்பார்ப்பு.
கடலூர் மாவட்டமே வெள்ளத்தால் மிதக்கிறது... மிகப் பெரிய ஏரிகளான வீராணமும் வாலஜா ஏரியும் நிரம்பி வழிகிறது... செங்கால் ஓடையில் மழை வெள்ள நீரோடு என்.எல்.சி நிர்வாகம் வெளியேற்றும் நீரும் சேர பரவணாறை பதம் பார்க்க ஊரெங்கும் வெள்ளம்...

கெடிலம் ஆறு தூர்வாரப்படாததால் திசைவழி தெரியாது தென்படும் திசையெல்லாம் வெள்ளம் புக பெரும் நாசக்காடாகிப் போய்கிடக்கிறது கடலூர்... முகத்துவாரங்கள் முன்கூட்டியே சீரமைக்கப்படாததால் கடலுக்குள் செல்ல முடியாத அத்தனை நீரும் கடலூருக்குள் புகுந்துவிடுகிறது..
கடந்த கால சுனாமி மற்றும் தானே புயலின் கோரத்தாண்டவத்தை விட இந்த பருவமழை போடும் பேயாட்டம் கடலூரை அழித்துப் போட்டிருக்கிறது.. இந்த பெருமழை வெள்ள மீட்புப் பணிகளில் தமிழக அரசு மும்முரம் காட்டியிருந்தது.. ஆனால் அது முடிவதற்குள்ளாகவே அந்த முகாம்கள் மூடப்படுவதற்குள்ளாகவே மீண்டும் பெருமழை...
கடந்த மழைவெள்ளத்தைப் பார்வையிட வராத முதல்வர் ஜெயலலிதா மீது அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த பேய்மழை வெள்ளத்தின் பாதிப்புகளையாவது அறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக வருவாரா? என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் கடலூர் மாவட்ட மக்கள்.
இதனிடையே பிரதமர் மோடியும் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட வரக் கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications